ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த பெண்ணொருவரின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சங்கானை பகுதியை சேர்ந்த 28 வயது பெண் மற்றும் 21 வயது ஆண்ஆகிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் சகோதரர்கள் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
திருநெல்வேலி சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்ய வந்த வெளிநாட்டு பெண்ணின் கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் , 500 யூரோ , மற்றும் 20 ஆயிரம் இலங்கை ரூபாய்க்கள் அடங்கிய கைப்பை மற்றும் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணொருவரால் நூதனமான முறையில் அபகரிக்கப்பட்டது.
திருட்டுச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வெளிநாட்டவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டை அடுத்து கண்காணிப்பு கமராவின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், பெண்ணொருவரை கைது செய்ததுடன் அவருக்கு உதவிய குற்ற சாட்டில் ஆணொருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருவரும் , சகோதரர்கள் எனவும் , திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments