Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வீடு தேடி வரும் 'நடமாடும் மின்மயானம்'


நன்றி - BBC. 

நடமாடும் மின்மயானம் உருவானது எப்படி?

கொரோனா பெருந்தொற்று காலத்தில், இறந்த நோயாளிகளின் சடலத்தை அரசே புதைத்தாலும், சடலங்களை அப்புறப்படுத்த இடம் கிடைக்காமல் தவித்து வந்தனர்.

எங்கு சென்றாலும் விறகுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அத்துடன் எரிக்கவோ புதைக்கவோ இடமின்றி அலையும் சூழலும் உருவானது. மின்மயானங்களிலும் எரியூட்ட நேரம் கிடைக்காமல் தவிக்கும் சூழல்தான் இருந்தது.

இதனை கருத்தில் கொண்டு சடலங்கள் எரிக்கும் இடத்துக்கே மின்மயானம் சென்றால் எப்படி இருக்கும்? என்று ஆலோசித்தார் ஈரோடு மாவட்ட மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கத்தின் சார்பில் உருவாகியுள்ள ஆத்மா மின்மயானத்தின் நிறுவனரும் மருத்துவருமான சகாதேவன்.

ஏற்கெனவே 2007 முதல் மின்மயானத்தில் எரியூட்டும் முறையை அவர் நன்கு அறிந்திருந்தார். பின் தொழில்நுட்பப் பிரிவினருடன் கலந்தாலோசித்து, இப்படி ஒரு எரியூட்டு இயந்திரத்தை செய்து அதை ஆம்புலன்சில் வைத்து எடுத்துச் சென்று எரியூட்டச் செய்யத் தேவையானவற்றை வடிவமைத்தனர்.

இதுகுறித்து பேசிய மருத்துவர் சகாதேவன் அதன் வடிவமைப்பை விளக்கினார். “நடமாடும் எரியூட்டும் இயந்திரத்தின் அடியில் சுழலும் சக்கரங்களை பொருத்தி அதனை ஒரு சங்கிலி உடன் இணைத்து, ஆம்புலன்ஸில் இருந்து சரிவான இறங்கு தளத்துடன் கூடிய இரும்பு சாளரத்தில் பொருத்தினர். அதனை கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறக்கும் வகையில் ஆட்டோமேட்டிக் மோட்டார் வசதி மூலம் சங்கிலியோடு பிணைத்தபடியே இறக்கினர். அதிக எடை இருந்தபோதும் மிகவும் பொறுமையாகவும் பாதுகாப்போடும் கீழே இறக்கும் வகையில் இதை வடிவமைத்தனர்.” என்றார்



நடமாடும் மின்மயானம் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்

முதலில் சோதனை முயற்சியின் போது வந்த சவால்களையும் அதை எவ்வாறு மேம்படுத்தினர் என்பதையும் ஆத்மா மின்மயான அறக்கட்டளை செயலர் வி.கே.ராஜமாணிக்கம் விளக்கினார்.

 “முதலில் உருவாக்கப்பட்ட நடமாடும் எரியூட்டும் இயந்திரம் ஒரு உடலை எரித்து சாம்பலாக்கி முடிக்க 2 மணி நேரம் எடுத்துக் கொண்டது. இது நமக்கிருக்கும் நேரப் பற்றாக்குறைக்கு அதிக நேரம்.

எனவே, மீண்டும் அதன் தொழில்நுட்பத்தை அதிகப்படுத்தி, கேஸ் மூலம் எரிவதோடு மட்டுமின்றி ஜென்செட் அமைத்து அதைக் கொண்டு அதிக காற்றை கொண்டு நெருப்பின் தீவிரத்தை அதிகரித்தோம். 

இதனால், ஒரு சடலம் எரிந்து முடித்து சாம்பலாகும் நேரம் 2-லிருந்து ஒரு மணி நேரமாகக் குறைந்தது. ஆகவே, இந்த இயந்திரத்தின் உதவியால் ஒரு மணி நேரத்தில் சடலத்தை எரித்து அஸ்தியை உறவினர்களிடம் அளித்துவிட முடியம்” என்றார்.


"இறந்தவர் விருப்பத்தை நிறைவேற்றலாம்"

இறந்தவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதாகக் கூறினார் வி.கே.ராஜமாணிக்கம். "பெரும்பாலும் வயதானவர்கள் தாங்கள் நீண்ட நாட்களாக வசித்த இடத்திலேயே தங்களை புதைக்கவோ எரிக்கவோ வேண்டும் என கேட்பார்கள். 

உதாரணத்துக்கு ஒரு 80 வயதான முதியவர் ஒரு தோட்டத்தில் வெகு நாட்களாக வாழ்ந்திருப்பார். அவரது கடின உழைப்பு அனைத்தையும் சேர்த்து அந்த தோட்டத்தை அவர் வாங்கி இருப்பார். மிகவும் ஆசை ஆசையாய் அதில் மரங்களை வளர்த்து இருப்பார்.

அப்படி இருக்கும்போது அவர் உயிரிழந்த பிறகு அதே தோட்டத்தில் வைத்து அவரது உடலை எரியூட்டினால் அந்தப் புகையானது அந்தத் தோட்டம், அங்கிருக்கும் மரங்கள் முழுக்கவும் நிறையும். இது அவர்களின் ஆத்மா சாந்தி அடைய உதவும் என்று நம்புகிறோம். 

எனவே கிராம சுடுகாடுகளுக்கு மட்டுமின்றி யாரேனும் அவரவர் சொந்த தோட்டத்தில் வைத்து இறந்தவரின் சடலத்தை எரியூட்ட வேண்டும் என்று கேட்டால் நாங்களும் இந்த நடமாடும் மின் மயானம் மூலம் தகனம் செய்து ஒரு மணி நேரத்தில் அஸ்தியைக் கொடுத்து விடுகிறோம்" என்றார்.


வேறு என்னென்ன வசதிகள் உள்ளன?

நடமாடும் தகன வாகனத்தில் மேலும் பல வசதிகள் இருப்பதாக கூறினார் ஆத்மா அறக்கட்டளையின் பொருளாளர் சரவணன். "கேஸ் மூலமும் ஜென்செட் மூலமும் உடலை எரியூட்டுவது மட்டுமின்றி, இரவு நேரங்களில் சுடுகாட்டில் ஒரு தோட்டத்திலே வைத்து எரிக்கும் போது, அங்கு வெளிச்சம் குறைவாக இருக்கும். எனவே, அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் உள்ளன. சுமார் ஒரு ஏக்கர் வரையில் ஒலிக்கக்கூடிய ஸ்பீக்கர்களும் உள்ளன. அதில்

'ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும் கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!"

என்ற மின்மயானங்களில் சடலத்தை எரியூட்டும் போது ஒலிக்கும் மென்மையான, அமைதி தரக்கூடிய அதே பாடல் ஒலிக்கும். அத்துடன் பக்கவாட்டில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. ஆவேசத்தில் யாரும் வந்து இயந்திரத்தை தொடாமல் தடுக்க இயந்திரத்தை இயக்குபவர் பாதுகாப்புக்கு நிற்பார்." என்றார்.

சுற்றுச்சூழலுக்கும் உகந்தது!

இது சுற்றுச்சூழலுக்கும் நல்லது என விளக்கம் அளித்தார் இந்த அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் சகாதேவன். "எருவா முட்டி, விறகு உள்ளிட்டவற்றை வைத்து எரிக்கும் போது அது சுற்றுச்சூழலுக்கு அதிக புகை மாசுவை கொடுக்கும். ஆனால் இது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவான புகையோடு ஆத்ம திருப்தியுடன் சடலத்தை எரிக்க உதவுகிறது. கிராமப்புற மக்கள் மட்டுமின்றி மலைப்பகுதியில் இருந்து மின்மயானத்தை தேடி வர முடியாத மக்களுக்காகவும், எங்களது வாகனம் அவர்களை தேடிச் செல்கிறது.

ஒவ்வொரு ஊரிலும் ரோட்டரி சங்கம் செயல்பட்டு வருகிறது. அவையும் அரசாங்க உதவியுடன் இது போன்ற ஒரு நடைமுறையை முன்னெடுத்தால் ஈரோடு மட்டுமன்றி அனைத்து மாவட்டங்களிலும் இன்னும் குறிப்பாக நாடு முழுக்கவும் இதனை விரிவு படுத்தினால் மக்கள் அனைவரும் பயன் பெற ஏதுவாக இருக்கும்.


பொதுவாக வீடு தேடி வரும் ஆம்புலன்ஸ் போல, வீடு தேடி வரும் அனைத்து சேவைகளுக்குமே மக்கள் மத்தியில் தற்போது வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதே போல்தான் நடமாடும் மின் மயானத்திற்கு கூட வரவேற்பு அதிகம் உள்ளது. மக்களின் பணம், நேரம், அலைச்சல் ஆகியவற்றை மிச்சப்படுத்தும் இந்த இயந்திரத்தை நாடு முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு செல்ல அரசு உதவ வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்தார்.

No comments