திருமறைக் கலாமன்றத்தால் அரை நூற்றாண்டைக் கடந்து வரலாற்றுப் பாரம்பரியத்துடன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் மேடையேற்றப்பட்டு வருகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான திருப்பாடுகளின் நாடகம் இவ்வாண்டு 'வேள்வித் திருமகன்' என்னும் பெயரில் மேடையறவுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் எதிர்வரும் 21 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையான நான்கு நாள்களுக்கு மாலை 6.45 மணிக்கு மேடையேற்றப்படவுள்ளது.
இம்முறை மேடையேற்றப்படும் ' வேள்வித் திருமகன்'திருப்பாடுகளின் நாடகம் முதன்முதலாக 2012 ஆம் ஆண்டிலும் அதனைத் தொடர்ந்து 2014 ஆம் 2016 ஆம் ஆண்டுகளிலும் மேடையேற்றப்பட்டது. தற்போது நான்காவது தடவையாக மேடையேற்றப்படுகின்றது.
திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அமரர் நீ.மரியசேவியர் அடிகளார் திருப்பாடுகளின் நாடகப் பாரம்பரியத்தினை தமிழ் மரபுக்குரிய தனித்துவங்களுடன் வளர்த்து வந்துள்ளார்.
திருப்பாடுகளின் நாடகத்துக்கான பெரும்பாலான பிரதிகளை நீ.மரியசேவியர் அடிகளாரே எழுதியுள்ளார்.அவரால் இறுதியாக எழுதப்பட்ட பிரதியே' வேள்வித் திருமகன்'. மரிய சேவியர் அடிகளாரால் எழுதப்பட்ட திருப்பாடுகளின் நாடகப் பிரதிகளில் இருந்து மொழிநடையிலும்,பொருள் அளிக்கையிலும் சற்று மாறுபட்டதாக எழுதப்பட்ட இப்படைப்பு வேள்விக் கருவை மையப்படுத்தியதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments