பொலிஸ் அவசர இலக்கமான 119க்கு தவறான தகவல்களை வழங்கிய நபருக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றினால் 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி, பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்தேகநபர் கினிகத்தேன பொலிஸ் நிலைய அதிகாரிகள் மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.
அந்தத் தகவலின் அடிப்படையில் ஹட்டன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், கினிகத்தேனை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று திடீர் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், தமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் போலியானது எனத் தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து, அழைப்பை விடுத்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு எதிராக ஹட்டன் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணைகளில் சந்தேகநபரை குற்றவாளியாக கண்ட மன்று, பொலிஸ் உத்தியோகத்தருக்கு 10 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு உத்தரவிட்டதுடன் , ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்தது.
No comments