யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் சிறப்பாக இயங்கிய குடிசை கைத்தொழில்களில் ஒன்றான சுருட்டு சுற்றும் தொழில் அழிவடையும் நிலையில் உள்ளதாக சுருட்டு சுற்றும் தொழிலை கடந்த 54 வருடங்களாக செய்து வரும் தொழிலாளி ஒருவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சுருட்டு சுற்றும் தொழில் நிலையத்தில் சுருட்டு சுற்றும் தொழிலாளி கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் தொழில் பழகும் போது 25 சதம் தான் எங்களுக்கு சம்பளம். நான்கு வருடமாக ஒரு முதலாளியின் கீழ் நின்று தான் பழகினேன். இன்றைக்கு 54 வருட காலமாக சுருட்டு சுற்றும் தொழில் செய்து வருகிறேன்.
இன்றைக்கும் எனது உழைப்பில் தான் வாழ வேண்டும் என இன்றும் சுருட்டு சுற்றி உழைத்து வாழ்கிறேன். நாங்கள் இறந்த பின்னர் இந்த தொழிலை தொடர்ந்து முன்னெடுக்க யாரும் இல்லை. இப்ப இந்த தொழில் செய்பவர்களுக்கு மரியாதை இல்லை என்ற எண்ணம் வந்திருக்கு.
ஒரு இடத்தில் நல்லது கெட்டதற்கு போகும் போது என்ன தொழில் என சொல்வதற்கு இப்ப உள்ளவர்களுக்கு மரியாதை குறைவு போன்ற எண்ணம் அதனால் அவர்கள் இந்த தொழிலை பழக விரும்பவில்லை.
கால போக்கில் இந்த சுற்று சுற்றும் தொழில் இல்லாமல் போகும். எங்கள் காலத்துடன் இந்த தொழில் இல்லாமல் போக போவதை நினைக்கும் போது எங்களுக்கும் கவலை தான் என்றார்.
No comments