மாத்தளை பிரதேசத்தில் வசிக்கும் கொழும்பில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டை ஊடாக கிளப் வசந்தவின் சடலம் வைக்கப்பட்டிருந்த தனியார் மலர்சாலைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
எனினும் குறித்த மாணவி அந்த சிம் அட்டையை பயன்படுத்தவில்லை எனவும் அதனை பயன்படுத்தி அழைப்பை மேற்கொண்ட நபரை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனால் அந்த அழைப்புகள் மூலம் விசாரணைகளை தவறாக வழிநடத்தும் முயற்சி நடந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, கடந்த 8ஆம் திகதி கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அத்துருகிரிய பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சுல, கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரது பாதுகாப்பு கருதி மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி மீண்டும் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள அவர், அன்றைய தினம் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு அனுமதிக்குமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பிரபல பாடகி கே. சுஜீவா, கிளப் வசந்தவின் மனைவி, பச்சை குத்தும் நிலைய உரிமையாளரின் மனைவி ஆகியோர் தொடர்ந்து வைத்தியசாலையிலி் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் கிளப் வசந்தவின் மனைவி ஆபத்தான நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments