வரலாற்று பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவில்
கலந்து கொள்வதற்காக இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.
யாழ்ப்பாணம் வந்த தருமபுரம் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாவை ஆதீனம் சார்பில் அச்சுவேலி, சிவாகம கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் பூரணகும்பம் வைத்து தருமபுரம் ஆதீனத்தை வரவேற்றார்.
அதனை தொடர்ந்து, நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ.முத்து ஸ்ரீநீவாக குருக்கள் மற்றும் திருநெல்வேலி
நீலாயாதாட்சி சமேத காயாரோகேணேஸ்வரர் தேவஸ்த்தான சிவஸ்ரீ.சதா.சிவகுமாரக்குருக்கள், பிரம்மஸ்ரீ.சிவஆனந்தகிருஸ்ண சர்மா, ஆகியோர் மாலை அணிவித்து ஆதீனத்தை வரவேற்றனர்.
தொடர்ந்து திருக்கேதீஸ்வரம் மற்றும் நல்லூர், வடக்கு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் கோவில் ஆலய அறங்காவலர்கள் மற்றும்
லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய இணை ஸ்தாபகர் கலாநிதி.அப்பையா தேவசகாயம் ஆகியோர் பொன்னாடை போர்த்தினர்.
மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் , கடந்த வெள்ளிக்கிழமை முதல் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் வியாழக்கிழமை வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெற்று , மறுநாள் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments