Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கட்சி மாறி வாக்களித்து விட்டேன் என ஆணையாளரிடம் முறையிட்டுள்ள வலி.மேற்கு உறுப்பினர்


ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவின் போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்ட மா.குமார் என்ற கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் நா.இரட்ணலிங்கத்தால் அனுப்பப்பட்ட  கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில்,

வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவின் போது கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக நீங்கள் எதிர்த்து வாக்களித்துள்ளீர்கள். ஆகையால் உடனடியாக அமுலுக்கு வரும்படியாக கட்சி உறுப்புரிமையில் இருந்து நீங்கள் இடை நிறுத்தப்படுகின்றீர்கள்.

தங்களது இந்த நடவடிக்கை சம்பந்தமான விளக்கம் ஏதும் இருப்பின் ஒரு வார காலத்திற்குள் எழுத்து மூலம் எனக்கு அறிவிக்க வேண்டும். இல்லையெனில் கட்சியில் இருந்தும் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுவீர்கள் - என்றுள்ளது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவின் போது தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் சன்முகநாதன் ஜெயந்தனும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் தர்மலிங்கம் சுப்பிரமணியம் நந்தகுமாரும் முன்மொழியப்பட்டனர்.

இதன்போது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் மா.குமார் ,தமிழரசுக் கட்சியின் தவிசாளர் வேட்பாளரான சன்முகநாதன் ஜெயந்தனுக்கு வாக்களித்திருந்தார்.

பின்னர் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் சென்று தான் தவறுதலாக தமிழரசுக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்து விட்டதாகவும் தனது வாக்கை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினருக்கு மாற்றுமாறும் கோரினார். எனினும் குறித்த வாக்கு பதியப்பட்டுவிட்டதாகவும் அதனை மாற்ற முடியாது என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தெரிவித்தார்.

இதேவேளை உப தவிசாளர் தெரிவின் போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினருக்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது

No comments