Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கில் கூட்டுறவுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் தவறான வழிகாட்டுதல்களை வழங்குவதாக குற்றச்சாட்டு


வடக்கில் கூட்டுறவுத் திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் தவறான வழிகாட்டுதல்களை சங்கங்களுக்கு வழங்குகின்றனர். அதே போல சங்கங்களின் பொதுமுகாமையாளர்களும் சங்கங்களை தவறாக வழிநடத்துகின்றனர் என கால்நடை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

வடக்கு மாகாணத்திலுள்ள கால்நடை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினர், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினர் ஆகியோருடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதன் போது, கால்நடை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், சமாசங்களின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

அதன் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், 

சில சங்கங்கள் பால் உற்பத்தியைக் கைவிட்டு தனித்து கால்நடைகளுக்கான மருந்துகளை விற்பனை செய்யும் நிலையங்களாக மாத்திரம் இயங்கி வருகின்றன. சில சங்கங்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றை மீளவும் இயக்குவதுடன் சங்கங்கள் அனைத்தும் பால் உற்பத்தியை நிச்சயம் மேற்கொள்ளவேண்டும். அதற்குரிய ஒழுங்குகள் செய்யப்படவேண்டும்.

சில பருவகாலத்தில் மேலதிகமான பால் உற்பத்தியை பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றியமைக்கும் உபகரணங்கள் கடந்த காலங்களில் சங்கங்களுக்கு வழங்கப்பட்டும் அவற்றைப் பயன்படுத்தி உற்பத்திகள் நடைபெறவில்லை. இவ்வாறான உபகரணங்கள் பழுதடைந்தால் அவற்றைத் திருத்துவதற்கான திருத்துனர்கள் இங்கு இல்லை 

மேலும் கூட்டுறவுத் திணைக்களங்களின் உத்தியோகத்தர்களும் தவறான வழிகாட்டுதல்களை சங்கங்களுக்கு வழங்குகின்றனர். அதேபோல சங்கங்களின் பொதுமுகாமையாளர்களும் சங்கங்களை தவறாக வழிநடத்துகின்றனர்.

கால்நடைகளுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் பொலிஸார் முறைப்பாடுகளை ஏற்பதில்லை

சிகிச்சைகளுக்காக ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்துக்கு கால்நடைகளை ஏற்றிச் செல்லும்போது நடவடிக்கை எடுக்கும் பொலிஸார், சட்டவிரோதமாக இறைச்சியாக்குவதற்கு கால்நடைகளைக் கொண்டு செல்லும்போது நடவடிக்கை எடுப்பதில்லை.

கால்நடைகளை சட்டவிரோதமாகக் கொண்டு செல்வோர் காண்பிக்கும் முறையற்ற ஆவணங்களை பொலிஸார் ஏற்றுக்கொள்கின்றனர்

கால்நடைகளுக்கான போதிய மேய்ச்சல் தரவைகள் இல்லை. அதேநேரம் கால்நடை வைத்தியர்களின் சேவைகளை ஆகக் குறைந்தது தொலைபேசியூடாகவாவது பெற்றுக்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

தென்னிலங்கையைச் சேர்ந்த பெரு நிறுவனங்களைவிட கூடிய விலைக்கு கூட்டுறவுச் சங்கங்கள் பாலைக் கொள்வனவு செய்யும்போதும் பலர் குறைந்த விலைக்கு தென்னிலங்கை நிறுவனங்களுக்கு பாலை வழங்குகின்றனர். 

கால்நடை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் குறித்தளவு பாலையே கொள்வனவு செய்கின்றன. ஆனால்  தென்னிலங்கை நிறுவனங்கள் அவ்வாறில்லாமல் உற்பத்தியாளரால் வழங்கும் பால் முழுவதையும் கொள்வனவு செய்கின்றன

கால்நடை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் மிதமிஞ்சிய பாலை, பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றினால் அவற்றை விற்பனை செய்வதில் - சந்தை வாய்ப்பை பெற்றுக் கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றன.

அதேநேரம், தொழில்நுட்ப அறிவும் சங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என என சங்கங்களின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை தெரிவித்தனர். 

No comments