ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதலீடுகளுக்கான சாதகமான சூழல் வடக்கில் உருவாகி வருகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபை பணியாளர்களுக்கான, 'தர முகாமைத்துவம்: கருத்துகளிலிருந்து சான்றிதழ் வரை' என்னும் தலைப்பிலான பயிற்சிப்பட்டறை வடக்கு மாகாண சபை மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதில் யுனிடோ நிறுவனத்தின் தேசிய தர உள்கட்டமைப்பு நிபுணர் திருமதி சுமதி ராஜசிங்கம் வளவாளராகக் கலந்துகொண்டார்.
பயிற்சிப்பட்டறையை ஆரம்பித்து வைத்த ஆளுநர், காலத்தின் தேவையறிந்து யுனிடோ நிறுவனம் முன்னெடுத்துள்ள முயற்சியைப் பாராட்டினார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது,
ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதலீடுகளுக்கான சாதகமான சூழல் வடக்கில் உருவாகி வருகின்றது.
முதலீட்டாளர்கள் இங்கு முதலிடும்போது அவர்களுக்குரிய தொழிற்படையை – மனிதவளத்தை தயார்படுத்தவேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது.
அதற்கான பணிகளையும் நாங்கள் முன்னெடுக்கவேண்டும். அதேவேளை ஏற்றுமதியை நோக்கியை தயார்படுத்தலும் எங்களுக்குத் தேவை என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
No comments