பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இரு இளைஞர்களையும் பிணையில் செல்ல பருத்தித்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமது நண்பனை பார்வையிட , வைத்தியசாலையில் பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்னர் இரு இளைஞர்களும் சென்றுள்ளனர்.
அவர்களை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வைத்தியசாலைக்குள் அனுமதிக்காத நிலையில் , அவர்களை மீறி உள்நுளைந்துள்ளனர்.
அதனை அடுத்து வைத்தியசாலையில் பணியில் இருந்த பொலிஸார் இருவரையும் தடுத்து நிறுத்திய வேளை அவர்களுடனும் முரண்பட்டுள்ளனர். இருவரும் மது போதையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் , இருவரையும் பொலிஸார் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
பருத்தித்துறை பொலிஸார் நீதவான் நீதிமன்றில் இருவரையும் முற்படுத்திய வேளை இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணியின் பிணை விண்ணப்பத்தினை ஏற்ற மன்று, இருவரையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான பிணையில் செல்ல அனுமதித்தது.
No comments