யாழ்ப்பாண மாநகர சபையின் நியதிக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஒருமித்த கருத்து இன்மையால், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமர்வில் குழப்பம் ஏற்பட்டது.
கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக, இன்றைய தினம் முதல்வர் மதிவதனி தலைமையில் விசேட அமர்வு ஆரம்பமானது.
கடந்த வாரம் சுகாதாரக் குழு உறுப்பினர் தேர்வில் ஏற்பட்ட குழப்பத்தால் அமர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அது தொடர்ந்து நடைபெற்றது.
அமர்வில், சுகாதாரக் குழு உள்ளிட்ட பல குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். உறுப்பினர் தேர்வு முடிந்தவுடன், முதல்வர் கூட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்து சபையிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், உறுப்பினர் தர்சானந்த், கடந்த 23ஆம் திகதி அமர்வில் சுகாதாரக் குழு தேர்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து எதிர்ப்பு தெரிவித்தார்.
முதல்வர் ஏற்கனவே குழப்பத்தை ஏற்படுத்திய அதே தேர்வுகளை இன்று ஏற்றுக்கொண்டது நியாயமற்றது எனவும், தமது கருத்துகளை வெளியிட சபையில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரினார். கூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவராமல் தொடர வேண்டும் எனக் கோரிய அவர், முதல்வர் வெளியேறுவதைத் தடுக்க முயன்றதால் மேலும் குழப்பம் ஏற்பட்டது.
முதல்வர் வெளியேறியதால், தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை எனத் தர்சானந்த் குறிப்பிட்டார். மேலும், சபையில் வெளி நபர்களின் ஆதிக்கம் வலுவாக உள்ளதாகவும், இது சபையின் நன்மைக்கு உகந்ததல்ல எனவும் சுட்டிக்காட்டினார்.
No comments