தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதேபோல இசைப்பிரியாவின் மரணம் உட்பட முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமானவர்களுடன் துணை நின்றவர்களுடன் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கின்றது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.
மேலும் தெரிவிக்கையில்,
'தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதனால்தான் அவரின் தலைமைப்பதவிக்கு எதிராகக்கூட கட்சிக்குள் கோஷங்கள் எழுப்பட்டு வருகின்றன.
தற்போது மட்டும் அல்ல தேர்தலுக்கு முன்பு இருந்தே தேசிய மக்கள் சக்திக்கு எதிராக சாணக்கியன் உள்ளிட்டவர்கள் போலிக்கருத்துகளை பரப்பி வந்தனர். அதன் மற்றுமொரு அங்கமே பிள்ளையான் கட்சியுடன் கூட்டு கதையாகும்.
தேசிய மக்கள் சக்தி, பிள்ளையானின் கட்சியுடன் கூட்டு சேரவில்லை. எந்தவொரு கட்சியுடனும் எமக்கு டீல் கிடையாது.
என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சாணக்கியன் ராஜபக்சக்களுடன் கரம்கோர்த்து இருந்த நபர். முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமாக இருந்தவர்களுடன் யாழில் இவர்கள் ஒன்று சேரலாம். எனவே, சித்து விளையாட்டுகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என சாணக்கியன் போன்றவர்கள் நினைக்கலாம். ஆனால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இலஞ்ச, ஊழல்களில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதனால்தான் களவாணிகள் கூட்டு சேர்ந்து குட்டி சபைகளில் ஆட்சி அமைக்க முற்படுகின்றனர். அந்த எதிர்பார்ப்பிலும் தற்போது மண்கவ்வியுள்ளனர். எனவே, சஜித்தின் தலைமைத்துவம் வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர் என மேலும் தெரிவித்தார்.
No comments