மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக சென்று மீண்டும் தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ஒருவரை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களுடன் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த கடத்தல் சம்பவம் நேற்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பான காணொளியும் வெளியாகி உள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக முன்னிலையானார்.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று மாலை மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்துள்ளார்.
இதன் போது மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி,காட்டாஸ்பத்திரி பகுதியில் குறித்த பேருந்தை வழிமறித்த ஒரு குழுவினர், பேருந்தில் ஏறி ஆயுதங்களினால் பயணிகளை அச்சுறுத்தி, குறித்த நபரை தாக்கி பேருந்தில் இருந்து இறக்கி மோட்டார் சைக்கிளில் கத்தி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர் குறித்த நபரை நடுக்குடா காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கிய பின் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments