யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இளைஞர் யுவதிகளுக்காக வேலைவாய்ப்பு தொழிற்சந்தை இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து குறித்த தொழிற்சந்தையை நடத்தின.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்ஹ, பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், தொழில் அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
கணக்கியல் துறை, காப்புறுதித் துறை, சந்தைப்படுத்தல் துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஹோட்டல் துறை, கணினித்துறை பயிற்சிநெறி, தாதியர் பயிற்சிநெறி, ஆடைத்தொழிற்சாலை, பாதுகாப்புச் சேவை, சுப்பர் மார்க்கெட் மற்றும் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் தொழிற்சந்தையில் கலந்து கொண்டன.
யாழ்ப்பாணத்திலுள்ள வேலை வாய்ப்பற்ற இளையோருக்கு குறித்த தொழிற்சந்தை நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் என யாழ். மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சந்தையில் பங்கேற்பதற்காக பெருமளவில் இளைஞர் யுவதிகள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments