நாடாளாவியரீதியில் ஆசிரியர்கள் அதிபர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி டிசம்பர் மாதம் 12ம் திகதி ஒரு நாள் அடையாள போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் இடமாற்றம் சம்பந்தமாக நடந்த முறைகேடுகளுக்கு எதிராக யாழ்ப்பாணம்மேல் நீதிமன்றத்தில் ஆசிரியர்களும் நாங்களும் இணைந்து வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தோம்.
குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை எடுக்கப்பட்டது. கல்வி அமைச்சு இதற்கு பதிலளிக்க காலத்தை கேட்டிருக்கிறது 11ஆம் மாதம் 24 ஆம் திகதி இந்த வழக்கு 3 தவணைக்காக போடப்பட்டிருக்கிறது.
இடமாற்றம் சம்பந்தமாக ஆசிரியர்களுக்கோ அதிபர்களுக்கோ நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? கல்வி அதிகாரிகள் தான் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். இடமாற்றம் காரணமாக பல பிரச்சினைகள் இருந்தது. ஆசிரியர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டார்கள்.
ஒரு போராட்டம் தொடர்பிலும் ஆளுநர் தனது கவனத்தை செலுத்தவில்லை. மாகாண சபை இல்லை. இங்கு ஆளுநரின் வழிநடத்தலில் நிர்வாகம் நடைபெறுகிறது.
ஆளுநரின் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்ற போதும்கூட ஆசிரியர்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஆளுநர் பின் கதவால் தப்பிச் சென்றார்.
எங்கள் உரிமைகளுக்காக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்திற்கு நாங்கள் வந்திருக்கிறோம்.
வடக்கு மாகாண கல்வி சம்பந்தமாக பல பிரச்சனைகள் உருவாகி இருக்கிறது. இதற்கு ஒரு தீர்வு வழங்க வேண்டும் ஜனநாயக ரீதியாக இங்கு செயல்பாடுகளை காணவில்லை. ஆளுநர் என் பி பி அரசின் பிரதிநிதியாக செயல்படுகிறார். ஆளுநர் பதவி என்பது என்.பி.பி அரசுக்கு சொந்தமான பதவி அல்ல. அது பொதுவான பதவி.
இந்தப் பிரச்சினைகளை கண்டித்து டிசம்பர் 12ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நாடளாவிய ரீதியில் இந்த போராட்டம் செய்யப்படவுள்ளது.
புதிய சீர்திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது. இந்த கல்விச் சீர்திருத்தத்தை நாங்கள் கல்வி திருத்தமாக பார்க்கவில்லை. இது ஒரு பாட திருத்தமாகவே நாங்கள் பார்க்கிறோம்.
ஏழரை மணியில் இருந்து ஒன்றரை மணி நேரம் இருந்த பாடசாலை நேரத்தை இரண்டு மணி வரை மாற்றியுள்ளார்கள். இதை யாருடன் பேசி செய்தார்கள்.ஆசிரியருடன் பேசினார்களா?அதிபர்களுடன் பேசினார்களா? தொழிற்சங்கங்களுடன் பேசினார்களா? தன்னிச்சையாகவர்கள் தீர்மானித்துள்ளார்கள்.
அடுத்த வருடம் முதலாம் ஆண்டுக்கும் ஆறாம் ஆண்டுக்கும் இந்த கல்வி சீர்திருத்தம் இருக்கின்றது. ஏழாம் ஆண்டிலிருந்து 13 ஆம் ஆண்டு வரை கல்வி சம்பந்தமாக பழைய பாடத்திட்டமே காணப்படும். இது ஒரு ஆயத்தம் இல்லாத செயற்பாடு.
அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டிற்கும் வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்திற்கும் ஆசிரியர்களின் சம்பளம் முரண்பாட்டு என எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கோரி
வருகின்ற 12ஆம் மாதம் 12ஆம் திகதி ஒரு நாள் அடையாள போராட்டத்திற்கு செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம் - என்றார்.






No comments