கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் மூவர் காருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வீதியில் நடந்து சென்றவர் மீது , பின்னால் நடந்து வந்த நபர் ஒருவர் மிக அருகில் சென்று துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு , பின்னர் கார் ஒன்றில் ஏறி , துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி விழுந்தவர் மீது காரினை ஏற்றி தப்பி சென்று இருந்தார்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய காரினை ஒத்த காரில் யாழ்ப்பாணத்தில் பயணித்த , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் மற்றும் பெண்ணொருவர் உள்ளிட்ட தென்னிலங்கை வாசி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தாம் கொழும்பில் காரினை வாடகைக்கு பெற்று யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்ததாகவும் , தமக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை , கொழும்பில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள விசேட குழு , கைது செய்யப்பட்டவர்களை விசாரணை செய்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கி விரைந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை கொழும்பில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் , யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு தப்பி செல்வது அதிகரித்துள்ள நிலையில் , யாழ்ப்பாண கரையோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்களை பாதுகாப்பு தரப்பினர் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






No comments