இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டமை கட்சியின் உட்கட்சி விவகாரமாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
சிறீதரன் எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சித் தலைமையகத்தில் சுமந்திரனைச் சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே சுமந்திரன் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சிறீதரன் விவகாரம் என்பது ஓராண்டு காலமாக நீடித்து வரும் ஒரு விடயமாகும். கட்சி அவருக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆலோசனைகளை வழங்கியிருந்தது. இறுதியாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களையும் அவர் பின்பற்றாத காரணத்தினாலேயே, அவரை நியமித்த அரசியல் குழு தற்போது அவரை அந்தப் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள தற்காலிக ஏற்பாட்டின் படி, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அந்தப் பதவியைப் பொறுப்பேற்பார். உண்மையில் அந்தப் பதவிக்குரிய பணிகளை இதுவரையில் அவரே முன்னெடுத்து வந்தார். இது ஏற்கனவே அரசியல் குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்
இது குறித்து கிளிநொச்சியிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளேன். இருப்பினும், இதனை முழுமையாகப் பகிரங்க வெளியில் சொல்வதற்கு இது தருணமல்ல. தேவை ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் உண்மைகளை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.
இதேவேளை, சுமந்திரனுடனான சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஒன்றியப் பிரதிநிதிகள்,
"கட்சிக்குள் நிலவும் குழப்பங்கள் ஆரோக்கியமானவை அல்ல. சிறீதரன் எம்.பி. திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகின்றார். அவருக்கு எதிராகச் சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் கலாசாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, கட்சி ஒருமித்த பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை சுமந்திரனிடம் வலியுறுத்தியுள்ளோம்." - என்றனர்.







No comments