16 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 16 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் கொழும்பு மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுடன், இவர்களில் ஆண்கள் இருவர் 33 மற்றும் 28 வயதுடையவர்கள் எனவும், பெண் 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் ஒருவர் மசாஜ் நிலையமொன்றை நடத்தி வருபவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் இந்த குஷ் போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கொள்வனவு செய்து, துபாய் ஊடாக எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-654 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளில் ஒன்றினுள் 60 பொதிகளாக பொதி செய்யப்பட்டிருந்த 16 கிலோ 400 கிராம் குஷ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.







No comments