யாழ்ப்பாண பாரம்பரியம் கலாச்சார பிரதிபலிப்புடன் மிக தரமான விருந்தோம்பலுடன் கூடிய சேவைகளை தாம் எதிர்காலத்தில் வழங்க தயாராகவுள்ளோம் என யாழ். சிற்றி ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த "ரில்கோ சிற்றி" ஹோட்டலை தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர் முழுமையாக வாங்கி , அதனை யாழ். சிற்றி ஹோட்டல் என இனிவரும் காலங்களில் இயக்கவுள்ளனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் ஊடக சந்திப்பு , யாழ். சிற்றி ஹோட்டலில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதன் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் இயங்கி வந்த ரில்கோ சிற்றி ஹோட்டலை நாம் முழுமையாக வாங்கியுள்ளோம். இனிவரும் காலங்களில் யாழ். சிற்றி ஹோட்டல் என்ற பெயருடன் ஹோட்டல் இயங்கும்.
நிர்வாக சீரமைப்புக்களை மேற்கொண்டு , தற்போது இருக்கும் பணியாளர்களுடன் மேலும் பலரை புதிதாக உள்வாங்கி புதிய தோற்றத்துடன் புது பொலிவுடன் ஹோட்டலை இயக்கவுள்ளோம். இதனால் யாழ்ப்பாணத்தில் பல வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் , அதன் பாரம்பரியம் கலை கலாச்சாரம் என்பவை தனித்துவமானவை. அவைக்கு என ஒரு பண்பு இருக்கிறது. அவற்றினை நாமும் மதித்து அதற்கு ஏற்றது போலவே எமது சேவைகளும் இருக்கும்.
குறிப்பாக யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகள் இங்குள்ள யாழ்ப்பாண ஹோட்டல்களில் இல்லை என்ற குற்றசாட்டுகள் உள்ளன.
அதனால் யாழ்ப்பாண பாரம்பரிய உணவுக்கு அதி முக்கியத்துவம் கொடுப்போம். சுற்றுலா பயணிகளை வடக்கு நோக்கி கவரும் முகமாக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம். குறிப்பாக யாழ்ப்பாண உணவு பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் உணவு திருவிழாக்களை நடாத்தவுள்ளோம்
அதேநேரம் தெற்கில் உள்ள பெரிய ஹோட்டல் துறை சார்ந்தவர்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் ஹோட்டல் துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுப்போம் என தெரிவித்தனர்.










No comments