Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். புகையிரத கடவைக்காக நீண்ட காலமாக தொடரும் போராட்டம் - இன்றும் கவனயீர்ப்பு போராட்டம்


யாழ்ப்பாணத்தில் மூடப்பட்ட புகையிரத கடவையை மீள திறக்க கோரி அப்பகுதியில் வசிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக செல்லும் வீதியில் புகையிரத கடவை ஒன்று அமைந்திருந்தது. 

குறித்த கடவை 1990ஆம் ஆண்டிற்கு முன்பாக புகையிரத பாதையில் காணப்பட்டமைக்கான குறிப்புக்கள் , வரைபடங்கள் இல்லாத காரணத்தால் , புகையிரத பாதையில் அப்பகுதியில் கடவை அமைக்க முடியாது என புகையிரத திணைக்களம் மறுத்து வந்தது. 

இருந்த போதிலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குறித்த இடத்தில் புகையிரத கடவை முன்னர் இருந்ததாகவும் , அதன் அடிப்படையில் கடவை அமைக்கப்பட வேண்டும் என கோரி கடவை அமைத்து பயணித்து வந்தனர். 

அந்நிலையில் குறித்த கடவை பாதுகாப்பற்ற கடவையாக காணப்பட்டமையால் , 2018ஆம் ஆண்டு பாதுகாப்பு கடவையாக மாற்ற அப்பகுதி மக்கள் சிலர் இணைந்து முயற்சித்தனர். 

அதேநேரம் குறித்த பகுதியில் புகையிரத கடவை அமைக்க வேண்டும் என கோரி யாழ். மாநகர சபையில் 2018ஆம் ஆண்டு பிரேரணை கொண்டு வரப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

அது தொடர்பில் புகையிரத திணைக்களத்துடன் நேரில் சென்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்ந்து அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். 

அதேநேரம் கடவைக்கு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாட்டையும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் , பொலிசார் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் அவை அகற்றப்பட்டன. 

இவ்வாறாக தொடர்ந்து பல வருடங்களாக குறித்த பகுதியில் கடவை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைத்து வரப்பட்ட நிலையில் , அண்மையில் புகையிரத திணைக்கள அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் புகையிரத பாதையில் அமைக்கப்பட்டிருந்த கடவை முற்றாக அகற்றப்பட்டு , குறித்த பகுதி ஊடாக வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை கடவை அகற்றப்பட்ட பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் , புகையிரத திணைக்களத்துடன் பேசி பாதுகாப்பான நிரந்தர கடவை அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன் என அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்திருந்தார். 

இந்நிலையில் , தமக்கு அப்பகுதியில் பாதுகாப்பான நிரந்தர புகையிரத கடவை அமைத்து தர வேண்டும் என கோரி ஏனைய அமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக அப்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. 










No comments