யாழ்ப்பாணம் - கொழும்பு இடையே பொருட்கள் போக்குவரத்தில் ஈடுபடும் பாரவூர்திகளுக்கான மேலதிக எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் மத்திய கிழக்கு பிராந்திய மோதல்களால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் விநியோகத்தை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
குறிப்பாக, யாழ்ப்பாணம் - கொழும்பு இடையே பொருட்கள் போக்குவரத்தில் ஈடுபடும் பாரவூர்திகளுக்கான மேலதிக எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட முடிவெடுக்கப்பட்டது.
மேலும், கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் அந்தந்த அமைப்புக்களின் விண்ணப்பங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும், ஏனைய தொழிற்துறையினர் பிரதேச செயலகங்கள் ஊடாக தமது கோரிக்கைகளை முன்வைத்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
புதிதாக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு உரிய அனுமதிகள் இதன் பின்னர் வழங்கப்பட்டன.
மேலும், யாழ். மாவட்ட செயலகம், வடக்கு மாகாண சபை மற்றும் மத்திய அரசின் திணைக்களங்களால் இவ்வாண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழான வீதிகளின் திருத்தப் பணிகள், படகுச் சேவைகள் மற்றும் தீவகப் பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
போக்குவரத்துச் சேவைகளான பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை (சிசுசரிய), இரவு நேர சேவை (நிசுசரிய) மற்றும் தொழில்துறை சார்ந்த இடங்களுக்கான போக்குவரத்து சேவை (ஹமிசரிய) ஆகியவற்றின் நிலை குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தீர்வு காணப்படாது மாவட்டக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்பட்டன.







No comments