தேர்தலுக்கு முன்னர் தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிய தற்போதைய அரசு, இன்று இலங்கை மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அரசின் தற்போதைய நகர்வுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
"தேர்தலுக்கு முன்பு மின்சார சபையின் 23 ஆயிரம் தொழிலாளர்களை வீதியில் இறக்கி, எக்காரணம் கொண்டும் மின்சார சபையைத் தனியார்மயமாக்க விடமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உறுதியளித்தது. ஆனால், இன்று அதிகாரத்தைப் பெற்றவுடன் அந்த வாக்குறுதியைத் தட்டிக்கழித்து, சபையைப் பல துண்டுகளாகப் பிரிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
மின்சக்தித் துறை என்பது நாட்டின் தேசிய பாதுகாப்புடன் நேரடித் தொடர்புடையது. எனவே, இதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மிகவும் பொறுப்புணர்வுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் தற்போதைய அரசு தன்னிச்சையாகச் செயற்படுகின்றது.
அதிகாரப் போதையில் இருக்கும் ஆட்சியாளர்கள், தங்களை நம்பி வாக்களித்த 23 ஆயிரம் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பலிகடாக்கியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையில் சீர்திருத்தங்கள் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தச் சீர்திருத்தங்கள் நிறுவனத்தையே இல்லாதொழிப்பதாக அமையக் கூடாது. ஒரு தசாப்த காலமாக இந்த மறுசீரமைப்புகளை எதிர்த்து வந்தவர்கள், இன்று மக்கள் ஆணையை அப்பட்டமாகக் காட்டிக்கொடுத்துள்ளனர். தொழிலாளர்களுடன் கலந்தாலோசிக்காமல் இவ்வாறான தனிப்பட்ட முடிவுகளை எடுக்க முடியாது.
ஏற்கனவே நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை முறையான திட்டமிடல் இன்றிப் பாதிப்புக்குள்ளாக்கிய இந்த அரசு, இப்போது ஒட்டுமொத்த மின்சார சபையையும் நாசமாக்கியுள்ளது. 23 ஆயிரம் குடும்பங்களின் எதிர்காலத்தை இருளுக்குள் தள்ளியுள்ள இந்த மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை. இனியாவது இவர்களது பொய்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்." - என்றார்.







No comments