யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கொடிகாமம், கெற்பேலி பகுதியில் , சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ,கடந்த சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விரைந்துள்ளனர்.
பொலிசாரை கண்டதும், உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸார் இருவர் மீதும் மோதி விட்டு தப்பி சென்றுள்ளார்.
உழவு இயந்திரம் மோதியதில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற மற்றைய பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், உழவு இயந்திரத்தின் உரிமையாளரை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று , சாரதிக்கு உதவியாளராக சென்ற இளைஞன் தலைமறைவாக இருந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த இளைஞனை பாலாவி பகுதியில் தலைமறைவாக இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அந்த இளைஞனை கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , சம்பவ தினத்தன்று , உழவு இயந்திரத்தை செலுத்திய பிரதான சந்தேக நபர் தலைமறைவாக உள்ள நிலையில் தொடர்ந்தும் தேடுதல் நடாத்தி வருவதாக தெரிவித்தனர்.







No comments