‘செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்’ எனும் கருப்பொரு ளில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கனடா ரொரண்டோ மாநகரில் நடைபெறவுள்ளது.
அது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் பேராசிரியர்களான முனைவர் அ. சண்முகதாஸ், முனைவர் கி. விசாகரூபன், முனைவர் போல் ரொகான், திருமதி விஜிதா திவாகரன் ஆகியோர் இது குறித்த விவரங்களை வெளியிட்டனர்.
அவர்கள் மாநாடு குறித்து தெரிவிக்கையில்,
இம்மாநாடு உலகம் முழுவதுமுள்ள அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்துச் செம்மொழித் தமிழ், செய்யறிவு, மெய்ப்பொருளியல், பண்பாடு, புலம்பெயர் வாழ்வு, உலகமயமாதல் மற்றும் பொருண்மிய மேம்பாடு ஆகிய துறைகளின் இணையிசைவுகளை ஆராயும் தளமாக அமையவுள்ளது.
தமிழ் அறிவியல் மரபுகளின் வரலாற்று ஆழத்தையும், சமகால உலகில் அவற்றின் பொருத்தப்பாட்டையும் வெளிப்படுத்தும் பல்துறை உரையாடல்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
தமிழும் செய்யறிவும், மெய்ப்பொருளியலும் பண்பாடும், பொருளியல் சிந்தனையும் வாழ்வியலும், தமிழர் வரலாறும் மற்றும் வடக்கு - கிழக்குப் பொருண்மிய மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுகள் கோரப்பட்டுள்ளன.
ஆய்வுக் கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் அமையலாம்.
ஆய்வு கட்டுரை தொடர்பான ஆய்வுச் சுருக்கம்: 250 - 300 சொற்களில் அமைந்திருக்க வேண்டும். ஆய்வுச் சுருக்கங்களைச் எதிர்வரும் ஜூன் மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆய்வுச் சுருக்கத்தை சமர்ப்பித்ததை அடுத்து, தேர்வு குறித்த முடிவுகள் ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படும்.
அதனை தொடர்ந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் 3 ஆயிரம் சொற்களுக்கு மிகாமல், முழுமையான கட்டுரைகளை ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்
தெரிவு செய்யப்படும் இலங்கை மற்றும் இந்தியக் கட்டுரையாளர்களுக்குக் கனடா செல்வதற்கான விமானப் பயணச் சீட்டு மற்றும் அங்கு தங்குமிட வசதிகள் என்பன மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவினால் வழங்கப்படும
கூடுதல் விபரங்களுக்கு www.GlobalTamilConference.org என்ற இணையதளத்தைப் பார்வையிட முடியும் என தெரிவித்தனர்









No comments