ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைவாக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 'தூய்மையான இலங்கை' வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக, 'அழகான கரையோரம் - கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்' எனும் தொனிப்பொருளிலான கரையோரப் பகுதிகளைச் சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டத்தின்,யாழ்ப்பாண மாவட்டத்துக்கான கரையோரச் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்றைய தினம் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் கீழ், அரச நிறுவனங்களின் ஆதரவுடன் நாடு முழுவதும் 256 கரையோரச் சுத்திகரிப்பு வேலைத்திட்டங்கள் இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு இணையாக, யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரங்களை உள்ளடக்கிய வகையில் 30 சுத்திகரிப்பு வேலைத்திட்டங்கள் இன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்பட்டன.
யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த நவரத்னவின் வழிகாட்டலிலும், 51ஆவது காலாட்படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரிஸ்வி ராசிக்கின் மேற்பார்வையிலும், 512ஆவது காலாட்படைப் பிரிகேடினால் பிரதான நிகழ்வு யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வேலைத்திட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம், சுற்றுலாப் பணியகம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் யாழ்ப்பாணப் பிரதேச அரச நிறுவனங்கள் ஆகியன ஒன்றிணைந்து செயற்பட்டன.
தூய்மையான மற்றும் அழகான நாட்டில் வாழ்வதற்கு அனைவரும் விரும்புகின்ற நிலையில், இந்த இலக்கை வெற்றிகரமாக அடைவது இலங்கையின் ஒவ்வொரு பிரஜையினதும் பொறுப்பாகும். பொறுப்புள்ள நபர்களாக எமது கடமையைச் செய்யத் தவறினால், சிறந்ததொரு எதிர்காலத்தை எதிர்பார்க்க முடியாது எனவும், இதற்கு அனைவரினதும் செயலூக்கமான பங்களிப்பும் அர்ப்பணிப்பும் அவசியமானது எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்த மாபெரும் கரையோரச் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த நவரத்ன, 51 ஆவது காலாட்படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரிஸ்வி ராசிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், யாழ்ப்பாணப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், பலாலி விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், படையினர், பொலிஸார், அரச அலுவலர்கள், பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

















No comments