வடக்கின் மாணவர்களை சர்வதேச பல்கலைக் கழகங்களுடன் நேரடியாக இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "Study In யாழ்ப்பாணம்" கல்வி நிறுவனம் யாழ்ப்பாணம் வேம்படிச் சந்திக்கு அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு நாடா வெட்டி நிறுவனத்தின் செயற்பாடுகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
"கற்க மறுப்பவர் வாழ மறுப்பவர்" எனும் பழந் தமிழ் வாசகத்திற்கு இணங்க, வடக்கு மக்களின் கல்வித் தேடலுக்கு வலுசேர்க்கும் நோக்குடன் குறித்த நிறுவனம் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடபகுதியில் ஆளுமை மிக்க மாணவர்கள் இருந்தும், அரச பல்கலைக் கழகங்களில் நுழைவதற்கான வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு, சர்வதேச ரீதியில் உயர்கல்வியைத் தொடர இதுவொரு சிறந்த அடித்தளமாக அமையும் என நிறுவனத்தின் பணிப்பாளர் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி ஆறு திருமுருகன், யாழ். மறை மாவட்டத்தை சேர்ந்த ஜெறோம் செல்வநாயகம் , யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் சந்திரமௌலி லலீசன், "Study In யாழ்ப்பாணம்" கல்வி நிறுவனத்தின் பணிப்பளார்களான ரிஷ்வான் மற்றும் ரிஸ்மி, செயல்பாட்டு தலைவர் ஐயாத்துரை கஜமுகன் உள்ளிட்டவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, விழாவிற்கு வருகை தந்த அதிதிகள் அனைவரும் மங்கள்வாத்தியங்கள் முழங்க, மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இக்கல்வி நிறுவனம் வடபகுதி மாணவர்களின் கல்வித் தரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதில் முக்கிய பங்காற்றும் என இதன்போது உரையாற்றிய விருந்தினர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.






















No comments