காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான பிரச்சனைகளை எதிர்வரும் 2 வருடங்களுக்கு தீர்த்து வைக்க எதிர்பார்ப்பதாகவும் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
யுத்தத்தில் வென்றவர்கள் , தோற்றவர்கள் என்னு இல்லாமல் எல்லாம் இழந்தவர்களே எஞ்சினார்கள்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் , அபிவிருத்தி போன்ற பல பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டது. அது யுத்தம் செய்வதனை விட கடினமானது.
வடக்கு , தெற்கு , மலையகம் என்ற எந்த வேறுபாடுகளும் இன்றி இந்த நாட்டு மக்கள் அந்த பொறுப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கைகளில் தந்துள்ளனர்.
அந்த பொறுப்பை ஏற்றுள்ள எமது அரசாங்கம் , இனவாத , மதவாத , பிரதேச வாத வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒரே மக்கள் என்ற நிலைப்பாட்டில் செயற்படுகின்றோம்.
நாட்டு மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கருத்தியல்களை உருவாக்குவதோ , கலந்துரையாடல்கள் மூலமோ முடியாது. அதனை செயற்பாட்டு ரீதியாக செயற்படுத்த வேண்டும்
யுத்தத்தில் நடக்க கூடாத பல விடயங்கள் நடந்து விட்டன. அதன் வலிகள் ஆழ் மனங்களில் இன்றும் காணப்படும். அதனை மறக்க வேண்டும் என நாம் கேட்கவில்லை. ஆனால் கடந்த காலத்தில் இருந்து நாம் மாறி முன்னோக்கி செல்ல வேண்டும். அதற்காக புதிய சிந்தனைகள் ஊடாக எமது எதிர்காலத்தை சிந்தித்து செயல்பட வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அதற்காக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகத்திற்கு கடந்த கால அரசாங்கங்கள் உரிய வசதிகளை செய்து கொடுக்கவில்லை. அந்த குறைபாடுகளை எமது அரசாங்கம் தீர்த்துள்ளது. அதற்காக பெருமளவான நிதியினை ஒதுக்கியுள்ளது. பல வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தற்போது வரையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவகத்திற்கு எமது அரசாங்கம் 375 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்துள்ளது. 69 வேலை வெற்றிடங்களை நிரப்பியுள்ளோம்
எமது அரசாங்கத்தை பொறுத்த வரையில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை எதிர்வரும் 2 வருட காலத்திற்குள் தீர்த்து வைக்க எதிர்பார்க்கிறோம். அதற்காக விசாரணைகளை துரிதமாக முன்னெடுத்துள்ளோம்.
எமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு , காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் , அதற்கு காரணமானவர்களை கண்டறிந்து , அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை செய்வது
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும். ஒரு உயிரின் மதிப்புக்கு அரசாங்கம் நிதி கொடுக்க அரசாங்கத்திடம் நிதியில்லை. ஒரு உயிருக்கு இவ்வளவு பெறுமதி என மதிக்க முடியாது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகளில் , சாட்சியங்கள் ஆதாரங்களின் , அடிப்படையிலும் , தரவுகளின் அடிப்படையிலும் , சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அது சில வேளைகளில் மக்கள் எதிர்பார்த்த நீதி கிடைக்காமல் போகலாம்.
ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கும். அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உதவி , வீட்டு திட்ட உதவி , தொழில் வாய்ப்பு என உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்போம்.
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை நீதியான முறையில் தீர்க்கவே எதிர்பார்க்கிறோம் என மேலும் தெரிவித்தார்.









No comments