Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.பல்கலை முகாமைத்துவ பீடத்திற்குள் முகத்தை மூடியவாறு மதில் ஏறி பாய்ந்து வந்தவர்களே வெசாக் கூட்டை உடைத்தனர்


யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி பாய்ந்து , அத்துமீறி நுழைந்த நபர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர்.எனவே தேவையற்ற - விசமப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு கடந்த 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழைமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் கல்வி பயிலும் சகல இன மாணவர்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனுமே தமது கற்கைகைளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒவ்வொருவருடைய இன - மத, சமய - சமூக பண்பாட்டு விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அந்தந்தக் காலப்பகுதிகளில் அவரவர் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறுவது வழமையாகும்.

அந்த வகையில் கடந்த வார இறுதியில் பௌத்த மாணவர்களால் 30, 31 ஆம் திகதிகளில் வெசாக் நிகழ்வுகளை நடாத்துவதற்கு முறையாக அனுமதி கோரப்பட்டிருந்தது.

சகல மதங்களுக்கும் சம மரியாதை அளிக்கும் வகையில் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 30 ஆம் திகதி சனிக்கிழமை எந்தவித அசம்பாவிதங்களுமின்றி நிகழ்வுகள் நிறைவு பெற்றிருந்தன.

31 ஆம் திகதி இரவு வரை நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த பின்னர் பின்னிரவு 10:50 மணியளவில் முகங்களைத் துணியால் மூடியபடி மதில் வழியாகப் பாய்ந்து உள்நுழைந்த இனந்தெரியாத இரண்டு பேர் பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரத்தை அடித்து சேதப்படுத்துவதை அவதானித்த கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை நோக்கிச் செல்ல அவர்கள் மதில் பாய்ந்து தப்பிச் சென்றனர்.

அதன் பின்னர் மீண்டும் நள்ளிரவு 12:50 மணிக்கு மீளவும் மதில் வழியால் குதித்து உள்நுளைந்துள்ளனர். மீண்டும் அதனைக் கண்ணுற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை விரட்டிச் சென்ற போது அவர்கள் மதிலேறித் தப்பிச் சென்றுவிட்டனர்.

சம்பவம் தொடர்பில் அந்த நேரத்தில் பீடாதிபதிக்கு அறிவிக்கப்பட்டு உடனடியாகத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பீடத்துக்கு விரைந்து வந்து தகவல்களினைப் பெற்றதோடு மறுநாள் துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கமைய பதிவாளரினால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இவ் அநாகரிக செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தற்போது பீடத்தில் வழமையான கற்கை நடவடிக்கைகள் ஒற்றுமையாக நடைபெறுகின்றது.

இதற்கிடையில் இச் சம்பவத்தின் அடிப்படையில் இன நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான தேவையற்ற பிரசாரங்களும் செய்திகளும் பரவிய வண்ணமுள்ளன.

 அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் சுமூகமான இயக்கத்தைக் குழப்பும் வகையிலும் தமிழ் - சிங்கள மாணவர்களிடையே காணப்படும் புரிந்துணர்வைக் குழப்பும் வகையில் இந்தச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது .

மாணவர்கள் மிகத் தெளிவாக உள்ளனர். எனவே தேவையற்ற - விசமப் பிரசாரங்களினை மேற்கொள்ள வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது 

No comments