Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சர்வதேச விசாரணை வேண்டும் - ஐநா ஆணையாளருக்கு மகஜர்


வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல தசாப்தங்களாக நீடித்த தாமதங்கள், தடைகள் மற்றும் தண்டனையின்மை காரணமாக உள்நாட்டுப் பொறிமுறைகளில் நம்பிக்கையை இழந்துள்ளதால், சுயாதீன சர்வதேச விசாரணையை மீண்டும் மீண்டும் கோரியுள்ளனர்.

 இக்கோரிக்கையை நாம் முழுமையாக ஆதரித்து அவர்களுடன் இணைகின்றோம் என  யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) க்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை வருமாறு , 

செம்மணி மனிதப் புதைகுழி அமைவிடத்திற்கு தாங்கள் 2025 ஜூன் மாதத்தில்   மேற்கொண்ட வருகையை நன்றியுடன் நினைவுகூருகின்றோம்.

 உண்மைக்கும் நீதிக்கும் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு தங்களது வருகை நம்பிக்கையை அளித்தது.2025 பிப்ரவரி மாதத்தில் செம்மணியிலுள்ள சித்துப்பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பின்னர் நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் அச்சமூட்டும் அளவில் மனித எச்சங்களை வெளிக்கொணர்ந்துள்ளன.

 2026 ஜூலை 21 ஆம் திகதியளவில், குழந்தைகள் மற்றும் சிசுக்களின் எச்சங்கள் உட்பட, 454 எலும்புக்கூட்டு எச்சத் தொகுதிகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் அடையாளங்கள், அவர்களது மரணங்களுக்கான காரணங்களும் திகதிகளும், அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதும் இதுவரை இறுதியாக உறுதிப்படுத்தப்படவில்லை. 

விசாரணையின் முடிவை முன்கூட்டியே தீர்மானிக்கவோ, நம்பகமான சான்றுகள் இன்றி எவர்மீதும் பொறுப்பைச் சுமத்தவோ நாம் விரும்பவில்லை. 

இருப்பினும், இப்புதைப்புகளின் அளவும் சூழ்நிலைகளும்; வெளிப்படையானதும், அறிவியல் ரீதியில் நம்பகமானதுமான, உண்மையை நிலைநாட்டி பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய சுயாதீன சர்வதேச விசாரணை அவசியமாக்குகின்றன.

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம், சட்ட மருத்துவ அதிகாரி, தொல்லியல் ஆய்வுக் குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் ஆற்றிவரும் அர்ப்பணிப்புமிக்க பணியை நாம் அங்கீகரிக்கின்றோம். 

இருப்பினும், தடயவியல் திறன், விசாரணைச் சுயாதீனம், சான்றுகளைப் பாதுகாத்தல், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துதல், குடும்பங்களின் பங்கேற்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தொடர்புடைய ஐக்கிய நாடுகள் பொறிமுறைகளும் எழுப்பியுள்ள கரிசனைகள் முழுமையாகத் தீர்க்கப்பட வேண்டும்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல தசாப்தங்களாக நீடித்த தாமதங்கள், தடைகள் மற்றும் தண்டனையின்மை காரணமாக உள்நாட்டுப் பொறிமுறைகளில் நம்பிக்கையை இழந்துள்ளதால், சுயாதீன சர்வதேச விசாரணையை மீண்டும் மீண்டும் கோரியுள்ளனர்.

 இக்கோரிக்கையை நாம் முழுமையாக ஆதரித்து அவர்களுடன் இணைகின்றோம். எமது ஆராய்ந்தறிந்த நிலைப்பாட்டின்படி, செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டவற்றின் அளவும் சூழலும், தமிழ் மக்கள் அனுபவித்துவரும் பரந்த கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையின் தெளிவான அறிகுறியாகும். 

இவ்வம்சங்கள் சர்வதேச சட்டத்திற்கிணங்க தகுதியும் சுயாதீனமும் கொண்ட சர்வதேசப் பொறிமுறையொன்றினால் ஆராயப்பட வேண்டும்.எனவே, பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்கள் அலுவலகத்திடம் நாம் மரியாதையுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்:

சுயாதீன சர்வதேச விசாரணை: செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணைக்கு ஆதரவளித்து வழிவகுக்கவும்; அதற்குப் பொருத்தமான சர்வதேச தடயவியல் நிபுணத்துவம், மேற்பார்வை மற்றும் நிறுவனச் சுயாதீனத்தைப் பாதுகாக்கும் ஏற்பாடுகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.

சர்வதேச நெறிமுறைகளைப் பின்பற்றுதல்: 

மனித எச்சங்களை அகழ்ந்தெடுத்தல், பரிசோதித்தல், அடையாளத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய அனைத்தும் மினசோட்டா நெறிமுறை (Minnesota Protocol) மற்றும் பொருந்தக்கூடிய ஏனைய சர்வதேசத் தரநிலைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யவும்.

நம்பகமான அடையாள உறுதிப்படுத்தல்: 

சுயாதீன DNA பகுப்பாய்வு, அறிவியல் கால நிர்ணயம், பொருத்தமான தனியுரிமைப் பாதுகாப்புகளுடன் குடும்ப ஒப்பீட்டிற்கான DNA மாதிரிகளைத் தன்னார்வ அடிப்படையில் சேகரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய நம்பகமான அடையாள உறுதிப்படுத்தல் செயல்முறைக்கு ஆதரவளிக்கவும்.

பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல்: 

விசாரணையாளர்கள் தொடர்புடைய அனைத்து இராணுவ, பொலிஸ், தடுப்புக்காவல் மற்றும் அரசாங்கப் பதிவுகளை அணுக முடிவதையும்; உரிய சட்ட நடைமுறையையும் குற்றமற்றவர் என்ற சட்ட முன்னனுமானத்தையும் மதித்தவாறு தனிநபர் மற்றும் நிறுவனப் பொறுப்பை நிலைநாட்ட முடிவதையும் உறுதிசெய்யவும்.பாதுகாப்பு மற்றும் பங்கேற்பு: குடும்பங்கள், சாட்சிகள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், சமயத் தலைவர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஆகியோரைப் பாதுகாத்து, அவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதிசெய்யவும்.நேரடி இருப்பு மற்றும் கண்காணிப்பு: மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம் (OHCHR Sri Lanka Accountability Project), அதன் ஆணை வரம்புக்குள் முன்னேற்றங்களைக் கண்காணித்து தொடர்புடைய சான்றுகளைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளவும்.செம்மணியில் புதைக்கப்பட்டவர்களின் எச்சங்களை அடையாளம் காண முன்வரும் சாட்சிகளின் பாதுகாப்பிற்காக யாழ்ப்பாணத்தில் OHCHR-இன் நேரடி இருப்பு அவசியம் என நாம் கருதுகின்றோம். 2026 ஜூலை 29 அன்று வெளியான உதயன் நாளிதழில், செம்மணியில் புதைக்கப்பட்டுள்ளவர்கள் தமது உறவினர்கள் என எவரும் உரிமைகோரவில்லை என்று நீதியமைச்சர் அண்மையில் தெரிவித்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது. மக்கள் மௌனமாக இருப்பதற்கான முதன்மைக் காரணம் பயமும் இலங்கை அரசாங்க நிறுவனங்கள் மீதான நம்பிக்கையின்மையுமே ஆகும்.பாதுகாப்பு உடன்பாடு: சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக ஐக்கிய நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் ஓர் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்றும் கோருகின்றோம்.எலும்புக்கூட்டு எச்சங்களின் ஒவ்வொரு தொகுதியும் மீறப்பட முடியாத மனித மாண்புடைய ஒரு நபரையும், துயரத்துடனும் நிச்சயமின்மையுடனும் வாழும் ஒரு குடும்பத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. எமது வேண்டுகோள் எந்தவொரு சமூகத்திற்கோ நிறுவனத்திற்கோ எதிரான பழிவாங்கும் எண்ணத்தாலோ பகைமையாலோ தூண்டப்படவில்லை. சான்றுகளால் நிறுவப்படும் உண்மை, சட்டத்தின்படி வழங்கப்படும் நீதி, இறந்தோரின் மாண்பு மற்றும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் உண்மையான நல்லிணக்கம் ஆகியவற்றையே நாம் நாடுகின்றோம்.இந்த விசாரணையை முன்னெடுத்து குடும்பங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தங்கள் அலுவலகமும் ஏனைய ஐக்கிய நாடுகள் பொறிமுறைகளும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளை விளக்கும் எழுத்துமூலப் பதிலுடன், தங்களது அவசரத் தலையீட்டை மரியாதையுடன் கோருகின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments