Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

'இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக' தெற்கில் இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். - ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கவலை தெரிவித்துள்ள வடக்கு ஆளுநர்


போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் 'இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக' இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். ஆனால், இராணுவம் விடுவிப்பது அந்த மக்களின் சொந்தக் காணிகளையே தவிர இராணுவத்தினரின் காணிகளை அல்ல. இந்த அரசாங்கம் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான செயன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தின் சமகால நிலவரங்கள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் குறித்து நேரில் ஆராய்ந்து அறிந்துகொள்வதே தமது இந்தப் பயணத்தின் பிரதான நோக்கம் எனத் தூதுக்குழுவினர் இதன்போது குறிப்பிட்டனர்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர், கடந்த காலங்களை விட தற்போது வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியதுடன், அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் விளக்கமளித்தார். 

குறிப்பாக, வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றால் கடந்த காலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் மாவட்டக் குழுக்களில் எட்டப்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் ஆளுநரால் தெளிவுபடுத்தப்பட்டது. 

அத்துடன், பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் சுட்டிக்காட்டிய ஆளுநர், இந்த விடயங்களை அரசாங்கம் மிகவும் நேரிய சிந்தனையுடனேயே அணுகி வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுவது தொடர்பிலும், செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் ஆளுநரிடம் கேட்டறிந்துகொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள், குறிப்பாக இந்தியாவின் பங்களிப்புடனான செயற்றிட்டங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. 

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கான இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு, துறைமுகம் எவ்வாறு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது, அதன் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பலாலி விமான நிலைய விரிவாக்கம், விமான சேவைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

வடக்கு மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் தூதுக்குழுவினர் ஆளுநரிடம் கேட்டறிந்தனர். 

வடக்கு மாகாணமானது விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளில் அதியுயர் வளங்களைக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அத்துறைகளில் முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்புகள் தற்போதும் காணப்படுவதாகத் தெரிவித்தார். 

அத்துடன், இலங்கை முதலீட்டுச் சபையின் ஊடாக வடக்கு மாகாணத்தில் மூன்று புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறித்தும் தூதுவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

இம்முக்கிய கலந்துரையாடலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக், நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இவர்களுடன், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளான பிரதித் தூதுக்குழுத் தலைவர்  கலியா அகிஷேவா, ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ், தொடர்பாடல் ஒருங்கிணைப்பாளர் சாரா பொன்சேகா சில்வா ஆகியோரும், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.












No comments