குடும்பத்தின் வருமானம் உயரும் போது பிள்ளைகளுக்கு திறமையான கல்வி வாய்ப்புகள் ஏற்படும். எனவே பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக குடும்பங்கள் தமது வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை , மெலிஞ்சி முனை பகுதியை சேர்ந்த 118 குடும்பங்களுக்கு கடலட்டை பண்ணைகள் கையளிக்கப்பட்டன.அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடலட்டை பண்ணைகளை வைத்திருப்போர் குழுக்களாக செயற்பட்டால் , பண்ணைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ள முடியும்.
தொழில் , சாதி , மத ரீதியாக பிரிந்து விடாமல் ஒரு வலுவான சங்கம் ஒன்றினை கடலட்டை பண்ணையாளர்கள் உருவாக்க வேண்டும்.
சங்க உறுப்பினர்கள் அங்கத்துவ பணம் செலுத்தி , சங்கத்திற்கான வருமானத்தை பெருக்க வேண்டும். அதனூடாகவே , சங்க உறுப்பினர்களின் நல்லது கெட்டதற்கு , சங்கத்தின் ஊடாகவே நிதியுதவி செய்ய முடியும்.
எமது அரசாங்கத்தின் நோக்கமே வறுமையை ஒழிப்பது. அதனால் கிராம மட்ட பிரச்சனைகளை இனம் கண்டு அவற்றை தீர்க்கும் முகமான கலந்துரையடல்களை முன்னெடுத்து வருகின்றோம்
வறுமை அதிகமாக இருக்கும் இடங்களில் கல்வி பின்தங்கிய நிலைகளில் காணப்படுகிறது.. கல்வி அறிவு குறையும் போது, அந்தப் பிரதேசங்களில் போதைப்பொருள் பயன்பாடு, வாள்வெட்டு , கள்ளக் கடத்தல் போன்ற கலாச்சாரச் சீரழிவுகள் அதிகரிக்கின்றன.எந்தவொரு பெற்றோரும் தன் பிள்ளை திருடனாகவோ அல்லது போதைக்கு அடிமையானவனாகவோ மாறுவதை விரும்புவதில்லை.
எமது அரசாங்கம் கல்விக்கு முன்னுரிமை வழங்கி, பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புப் பிரச்சனைகளைத் தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
அதேவேளை குடும்பங்களில் வறுமைகள் நீங்கும் போது பிள்ளைகளுக்கும் நல்ல கல்வி கிடைக்கும். அதனூடாக கல்வி வளர்ச்சி ஏற்பட்டு , கிராமங்கள் அபிவிருத்தி அடையும் என தெரிவித்தார்.









No comments