யாழ்ப்பாணம், குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த படகு, விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில், துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு , தொடர்புடைய தரப்பினருக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த சிறிய ரக தனியார் படகு புறப்பட்டு சில நிமிடங்களில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் , படகில் பயணித்த 2 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் மீட்கப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளார்.
அத்துடன், படகில் பயணித்தவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அங்கிகள் (Life Jackets) வழங்கப்பட்டிருந்தனவா, படகின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தனவா என்பன தொடர்பிலும் விசாரணை நடத்தி தகவல் தருமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடற்பயணங்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.









No comments