வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வவுனியா , புதுக்குளம் மற்றும் அதன்கீழான தமிழ்மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்
வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றது. அக்கூட்டத்திலேயே இவ்விடயம்தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
மாறாயிலுப்பை கமக்காரஅமைப்பு பிரிவிலுள்ள புதுக்குளமும் அதன்கீழான 14விவசாயிகளுக்குரிய 52ஏக்கர் பூர்வீக வயல்காணிகளும் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளது.
வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ள அந்த வயல் பகுதியானது சிறு பற்றைக் காடாகவே காணப்படுகின்றது. தேவையெனில் குறித்த பகுதிக்கு உரியவர்களை நேரடியாக அழைத்துச் சென்று காண்பிக்க முடியும்.
இந்நிலையில் வனவளத் திணைக்களத்தின் பிடியிலுள்ள தமது வயல்காணிகளை விடுவிக்குமாறு அந்தக் காணிகளுக்குரிய விவசாயிகள் கதறி அழுகின்றனர்.
இந்நிலையில் வனவளத் திணைக்களத்தின் அபகரிப்பிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு காணிகளுக்குரிய விவசாயிகள் கோரும்போது, அவர்களிடம் காணிகளுக்குரிய ஆவணங்களைக் காண்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
கடந்த கால யுத்தநிலைமை காரணமாக மக்கள் கோவணத்துடன் ஓடினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். முன்னைய அரசாங்கங்களால் எமது மக்களுக்கு அத்தகைய நிலையே ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறிருக்கையில் அந்த மக்களிடம் ஆவணங்களைக் கோருவது முறையல்ல.
வனவளத்திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது மக்கள் தமது வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்ளும் வயல்காணிகளாகும்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டு அக்காணிகளில் பயிர்ச்செய்கை மேற்கொண்டாலே மக்களால் அவர்களது குடும்ப பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும். அவர்களது பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளையும் பார்த்துக்கொள்ளமுடியும்.
அந்த மக்களிடம் வேறு காணிகளும் கிடையாது. எனவே அந்த மக்களுடைய வயல்காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமெனத் தெரிவித்தார்.
இந்நிலையில் அந்தக்காணிகளுக்குப் பதிலாக விவசாயிகளுக்கு வேறு இடத்தில் மாற்றுக்காணிகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக வனவளத் திணைக்களத்தால் தமக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா வடக்கு உதவிப் பிரதேசசெயலாளரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதன்போது வவுனியா வடக்கு உதவிப் பிரதேசசெயலாளரின் இத்தகைய கருத்திற்கு கடுமையாக எதிர்ப்பு வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், மக்களுடைய பூர்வீகக் காணிகளை அபகரித்துவைத்துக்கொண்டு அதற்குப்பதிலாக வேறு இடத்தில் காணிவழங்குவதாக எவ்வாறு வனவளத்திணைக்களத்தால் முடிவெடுக்கமுடியுமெனக் கேள்வி எழுப்பினார்.
அத்தோடு மக்களுடைய பூர்வீக வயல்களிகளை விடுவிக்கத்தவறினால், அந்த காணிகளுக்குரிய மக்கள் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
எனவே அந்த மக்களுடைய பூர்வீக வயல்கணிகளை அந்த மக்களுக்கு விடுவித்த வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தினார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் விடுவிக்குமாறு கோருகின்ற பகுதியானது அடர்ந்த வனப்பகுதியாகக் காணப்படுவதனால் விடுவிக்க முடியாதென வனவளத்திணைக்கள உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டது.
வனவளத் திணைக்கள உத்தியோகத்தரது இத்தகைய கருத்தை ஏற்கமுடியாதென தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த பகுதிக்குத் தாம் கடந்த 01.09.2026அன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டதாகவும் அப்பகுதி சிறு பற்றைக்காடாகவே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். எனவே அந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்தும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து வனவளத்திணைக்களத்தின் கையகப்படுத்தலிலுள்ள குறித்த மாறாயிலுப்பை, புதுக்குளம் வயல் காணிகளை நேரடியாகச் சென்று பார்வையிடுவதென வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அந்தவகையில் தனது தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர், வனவளத்திணைக்களம், காணிகளுக்குரிய மக்கள் என அனைவரும் இணைந்து அந்தப்பகுதியை நேரடியாகப் பார்வையிட்ட பின்னர் குறித்த விடயம் தொடர்பில் நல்லதொரு முடிவெடுக்கப்படுமென வவுனியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
அந்த மக்களின் பூர்வீகக்காணிகளை விடுவிப்பதே நல்லமுடிவெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அத்தகைய முடிவு எடுக்கப்படவேண்டுமெனத் தெரிவித்தார்.









No comments