“எங்களுடைய மத அடையாளங்களையும் கலாசாரத்தையும் ஒருபோதுமே விட்டுக்கொடுக்க முடியாது. அதனால் திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தை பௌத்த மத அடையாளமாகக் காணப்பட்டது என்ற பௌத்த பிக்குவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு எமது கடும் கண்டத்தை வெளிப்படுத்துவோம்” இவ்வாறு முன்னாள் பிரதி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக பொறுப்புள்ள பதிவியில் உள்ள அந்த பௌத்த பிக்குவின் கருத்துத் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோருவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“திருகோணமலையில் அமைந்துள்ள பாடல்பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் கோயில் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது. இதற்காக நாம் கோயிலை இடித்து விகாரை கட்டமாட்டோம். ஆனால், அந்தப் பகுதியில் பௌத்தர்களுக்குரிய தொல்பொருள்கள் இருந்தால் அவை பாதுகாக்கப்படவேண்டும். இதனைச் செய்தாலே போதும்” என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவ மேதானந்த தேரர் தெரிவித்தார்.
அதுதொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“எமக்கு எதிராக இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதற்காக எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு கூச்சல் போட்டும் அதனைச் செயற்படுத்த முடியாது. இவற்றைக் கட்டுப்படுத்துமாறு அரசுக்குள்ளே இருந்து கொண்டுதான் நாம் சொல்ல முடியும்.
இவற்றை நாம் சொல்லாமல் விட்டால், எமது அடையாளங்களை இவ்வாறான நிகழ்ச்சி நிரலை வைத்துக் கொண்டு தட்டிப்பறித்துக் கொண்டு போவார்கள். அதைக் கேட்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அடிப்படையிலேயே நாம் அரசுக்கு எமது பங்களிப்பை வழங்க வந்திருக்கின்றோம்” என்றும் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார்.









No comments