இலங்கை கோரிய ஒரு மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை குறைந்தபட்சம் ஏப்ரல் பிற்பகுதி வரை தங்களால் வழங்க முடியாது என சீரம் இன்ஸ்டிடியூட் ஓப் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக குறித்த இந்திய நிறுவனம், எழுத்து மூலம் இலங்கைக்கு தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் 3ஆம் திகதி, இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தபானத்திற்கு (எஸ்.பி.சி) அனுப்பிய ஒரு கடிதத்தில் சீரம் நிறுவனம் தடுப்பூசி உற்பத்தித் திட்டங்கள் ஒரு தடையை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது ‘உங்களுக்கு எதிர்காலத்தில்’ தடுப்பூசிகளை வழங்குவதற்கான திறனைப் பாதிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை சீரம் நிறுவனத்திடம் 1.5 மில்லியன் தடுப்பூசிக்கு 5.25 அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளது.
இதில் 500,000 டோஸ் பெப்ரவரி இறுதி வாரத்தில் சமூக தடுப்பூசி திட்டத்திற்காக பெறப்பட்டது. மீதமுள்ள ஒரு மில்லியன் டோஸ் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இலங்கைக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
No comments