யுத்த குற்றங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் முதலில் விசாரிக்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி நேற்று (சனிக்கிழமை) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கூட்டமைப்பின் அறிக்கை சர்வதேச சமூகத்தை ஈர்க்குமென இரா.சம்பந்தன், ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தியைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை.
அவர் நினைத்திருந்தால் யுத்தத்தையும் தடுத்து நிறுத்தி, விடுதலைப் புலிகளையும் ஜனநாயக அரசியலில் ஈடுபட வைத்திருக்கலாம். அப்படி ஒரு சூழ்நிலை அந்த காலகட்டத்தில் இருந்தது.
விடுதலைப் புலிகள் அழிந்தால் தமிழ் மக்களும் அழிவார்கள் என்ற விடயம் இரா.சம்பந்தனுக்கு தெரியாதா? தமிழ் மக்கள் எவ்வளவு பேர் அழிந்தாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகள் அழிந்தால் போதும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயற்பட்ட அவர், இன்று ஐ.நா.விற்கு அறிக்கை சமர்பிக்க முயற்ச்சிக்கின்றார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அத்தனை அழிவுகளிற்கும் முக்கியமாக இரா.சம்பந்தனும் மற்றும் ஒருவரும் பொறுப்புக் கூற வேண்டும். யுத்த குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டிய முதல் குற்றவாளிகளும் இவர்களே.
ஏனெனில் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகளோடும், இலங்கை அரசோடும், நடுநிலை நாடுகளோடும் சமரசத்திற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்காது, விடுதலைப் புலிகள் மூலம் வெற்றி பெற்ற 22 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, யுத்த அழிவுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட சர்வகட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாது தவிர்த்தார்.
இதேவேளை பிரித்தானிய நாடாளுமன்றக் குழு இலங்கை வந்தபோது இந்திய தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக ஒரு மிகப்பெரிய அனர்த்தம் நடக்கப் போகின்றது என்று கூறி, மெதுவாக நழுவிக் கொண்டார். யுத்த காலத்தில் அவரின் குழுவில் குறைந்தது 12 உறுப்பினர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா அனுப்பிவிட்டு தற்போது இப்படியான ஒரு செய்தியை வெளியிட வெட்கம் இல்லையா? நான் அவரை கேட்க விரும்புவது யாதெனில் அவரின் உறுப்பினர்கள் அனைவரினதும் தொலைபேசிகள், யுத்த கால இறுதி நாட்களில் இயங்கவில்லை என்ற கூற்று உண்மையா?
இலங்கை அரசின் இறுதி சர்வகட்சிக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை. அந்த நேரத்தில் நான் கலந்து கொண்டு இன்னும் மூன்று இலட்சத்திற்கு மேல் மக்கள் உணவின்றித் தவிக்கிறார்கள் என்று கூறினேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக 2015ம் ஆண்டு தொடக்கம் 2019ம் ஆண்டு வரை நடந்த, எதிர்க்கட்சித் தலைவர் கதிரையை அலங்கரித்த தேசிய அரசாங்கத்தில், யுத்தத்தை நடத்தி முடித்த, வெள்ளைக் கொடி விவகாரத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய சரத்பொன்சேகாவுடன் கூடிக் குலாவித் திரிந்தபோது யுத்தத்தில் என்ன நடந்தது என்ற விபரங்களை அவரிடம் கேட்டுப்பெற்று அந்தக்கால கட்டத்தில் நடந்த ஐ.நா மனித உரிமை மாநாட்டிற்கு அனுப்பக்கூடிய ஒரு அறிக்கையை ஏன் சமர்ப்பிக்கவில்லை
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறி விட்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் அந்த அறிக்கையை தயாரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்
No comments