மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தால், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு இன்று (29) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி மற்றும் அவரது உறுப்புரிமை நீக்கப்பட்டு, கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், நேற்று (28), கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனுவை இன்று (29) ஆராய்ந்த சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகிய நீதிபதிகள் குழாம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த மனு தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை, இந்த உத்தரவு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முஜாஹிர் சார்பில், சட்டத்தரணிகளான என்.எம்.ஷஹீட், ருஷ்தி ஹபீப் உள்ளிட்ட குழாமினர் வாதங்களை முன்வைத்திருந்தனர்.
மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு, இன்று (29) நடைபெற்ற நிலையிலேயே, இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments