முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட இராணுவத்தினரை , இராணுவ பொலிஸார் தமது பாதுகாப்பின் கீழ் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில், முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் நேற்றைய தினம் சனிக்கிழமை இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தார்.
பச்சை மட்டை ஒன்றில் முள்ளுக்கம்பி சுற்றி , அதனால் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதனடிப்படையில் , தாக்குதல் மேற்கொண்ட இராணுவத்தினர் மூவரை பொலிஸ் நிலையத்தில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
பின்னர் இராணுவத்தினர் மூவரையும், இராணுவ பொலிஸார் தமது பொறுப்பின் கீழ் எடுத்துள்ளனர்.
இராணுவ நடைமுறையின் கீழ் இராணுவ பொலிஸாரின் விசாரணைக்காகவே அவர்களை இராணுவ பொலிஸார் அழைத்து சென்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை , ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பில் கண்டன போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments