கோப்புப்படம்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சிலாபம் சென்று உயிர் பலி கொடுத்து புதையல் தோண்டிய பூசாரி உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பூசாரி , ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் சிலாபம் நகர சபை உறுப்பினரும் அவரது இரண்டு மகன்களும் கண்டியை சேர்ந்த இருவருமாக ஆறு பேர் சிலாபம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆறு பேரும், ஆராய்ச்சிக்கட்டுவ மானாவெரிய பகுதியில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதனை அடுத்து குறித்த பகுதியினை பொலிஸார் சுற்றிவளைத்து இருந்தனர்.
அதன் போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த பூசாரி , இரண்டு கோழிகளை உயிர்ப்பலி கொடுத்து , புதையல் பூஜையை செய்துள்ளார்.
அவர்களை சுற்றி வளைத்த பொலிஸார் பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் , புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவற்றை தடய பொருட்களாக மீட்டதுடன் , அங்கிருந்த ஆறு பேரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , ஆறு பேரையும் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , ஆறு பேரையும் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.







No comments