ஓர் பாலின திருமணம் செய்து கொள்ள விரும்பிய இரு பெண்களையும் உள நல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தமிழகத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான பெண்ணுக்கும் , அக்கரைப்பற்றை சேர்ந்த திருமணமாகாத பெண்ணுக்கும் இடையில் சமூக ஊடகங்கள் ஊடாக தொடர்பு ஏற்பட்டு , பின்னர் அவர்கள் இருவரும் தொலைபேசி இலக்கங்களையும் பரிமாறி நட்பை வளர்த்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 20ஆம் திகதி தமிழக பெண் , இலங்கை வந்து அக்கரைப்பற்றில் உள்ள தனது நண்பியை சந்தித்ததுடன் , நண்பியின் பெற்றோரிடம் தாங்கள் இருவரும் திருமணம் செய்ய விரும்புவதாகவும் , தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறும் கோரியுள்ளனர்.
அதனை அடுத்து வீட்டில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து, அக்கரைப்பற்று பெண்ணின் தந்தையால் பொலிஸ் நிலையத்தில் தமிழக பெண்ணுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.
தமிழக பெண்ணிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , தாம் இருவரும் கடந்த 2 வருட காலமாக காதலித்து வருவதாகவும் , இவரை தமிழகத்திற்கு வருமாறு அழைத்த போது , இலங்கையில் தற்போது கடவுசீட்டு பெறுவதில் பெரும் சிரமங்கள் இருப்பதனால் அதனை பெற முடியவில்லை என கூறினார். அதனாலயே நான் இவரை திருமணம் செய்து ,தமிழகம் அழைத்து செல்லும் எண்ணத்துடன் இங்கே வந்துள்ளேன் என தெரிவித்தார்.
விசாரணைகளின் பின்னர் பொலிஸார் இரு பெண்களையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர். இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த நீதவான் , இருவரையும் கல்முனை வடக்கு வைத்தியசாலையின் உளநல மருத்து நிவுணரிடம் காண்பித்து அதன் அறிக்கையை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
No comments