கைத்துப்பாக்கி விற்பனைக்கு உண்டு என விளம்பரம் செய்து அதனை வாங்க வருவோரை அச்சுறுத்தி பணம் பறித்து வந்த கொள்ளை கும்பல் ஒன்றை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் நாத்தாண்டிய மற்றும் வென்னப்புவ பகுதிகளை சேர்ந்த போதைக்கு அடிமையான கும்பல் எனவும் , அவர்களிடம் இருந்து 50 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த நபர்கள் , தம்மிடம் கைத்துப்பாக்கி விற்பனைக்கு உள்ளது எனவும் அதன் விலை 32 ஆயிரம் ரூபாய் எனவும் இணைய விளம்பர தளங்களில் விளம்பரங்களை செய்து வந்துள்ளனர்.
அவற்றினை பார்வையிட்ட நபர்கள் , கைத்துப்பாக்கியை வாங்குவதற்கு விசாரிக்கும் போது ஆள்நடமாட்டம் அற்ற பகுதிக்கு வரவழைத்து அவர்களை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையடித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வென்னப்புவ பொலிஸ் விசேட அதிரடி படையினர் குறித்த விளம்பரம் தொடர்பில் அறிந்து , அதனை வாங்குவோர் போன்று சென்றே கைது நடவடிக்கையை முன்னெடுத்து இருந்தனர்.
குறித்த நபர்களிடம் கைத்துப்பாக்கி இல்லாத நிலையில் , போலி விளம்பரத்தை செய்தே வாங்க வருபவர்களை அச்சுறுத்தி பணம் பறித்து வந்த விடயம் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து சந்தேக நபர்கள் நால்வரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் , பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.
No comments