பணியாற்றிய படை முகாமில் துப்பாக்கிச் சூடு நடத்தி இராணுவத்தினர் இருவரை கொலை செய்தமை மற்றும் ஒருவருக்கு படுகாயம் ஏற்படுத்திய இராணுவச் சிப்பாய்க்கு இரட்டைத் தூக்குத் தண்டனை மற்றும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம். மொஹமட் மிஹால் தீர்ப்பளித்தார்.
2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதி முருங்கன் படை முகாமில் பணியாற்றிய வணசிங்க நிமலசிறி டி சில்வா என்ற படைச் சிப்பாய் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இராணுவத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் படுகாயமடைந்தார்.
சம்பவம் தொடர்பில் மன்னார் நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் எதிரி மீது இரட்டை ஆட்கொலை மற்றும் ஆபத்தான் காயம் விளைவித்தமை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிவான் விளம்பல் கட்டளை வழங்கினார்.
அதனடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னாள் இராணுவச் சிப்பாய் மீது முதலாம், இரண்டாம் குற்றச்சாட்டுகளாக ஆட்கொலை மற்றும் மூன்றாவது குற்றச்சாட்டாக ஆபத்தான காயம் விளைவித்தமையின் கீழ் மன்னார் மேல் நீதிமன்றில் குற்றப்பகர்வு பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகை மீதான விளக்கம் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று (டிசெம்பர் 6) தீர்ப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தது. வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டவாதி அரச சாட்சிகளை நெறிப்படுத்தினார்.
“எதிரி மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் சிவில் சாட்சியங்கள் மற்றும் நிபுணத்துவ சாட்சியங்களின் அடிப்படையில் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுநரினால் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை குற்றவாளியாக மன்று தீர்ப்பளிக்கின்றது.
முதலாவது மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுகளான ஆட்கொலைக்கு இரட்டை தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்படுகிறது. மூன்றாவது குற்றச்சாட்டான ஆபத்தான காயம் விளைவித்தமைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது” என்று மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
No comments