Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வெடுக்குநாறி மலையில் பொலிஸார் மேற்கொண்ட அராஜகத்திற்கு எதிராக அணி திரளுங்கள்


வவுனியா வெடுக்குநாறிமலையில் பொலிஸார் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனத்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ள யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், இதற்கு எதிராக பொது அமைப்புகளால் நல்லூரில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்று வலுச்சேர்க்குமாறும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வெடுக்குநாறிமலையில் பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பாக வி.மணிவண்ணன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

சிவ பக்தர்களுக்குரிய கவலைகள் நீங்கி, காரிய வெற்றியை தரக் கூடிய நாள் மகா சிவராத்திரி விரத நாளாகும். அந் நாளில் சிவாலயங்களில் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து ஓம் நமசிவாய என்று திரு நாமத்தை உச்சாடனம் செய்வார்கள். அவ்வாறே தமிழர்களின் மிகத் தொன்மையான வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்திலும் சிவபக்தர்கள் ஒன்று கூடி சிவபெருமானுக்கு ஆராதனைகளைச் செய்தார்கள்.

அந் நேரத்தில் சிவபூஜையில் கரடி போல் உள்நுழைந்த பொலிசார் அங்கிருந்த சிவபக்தர்கள் மீது தாக்குதல் நடத்தி வலுக்கட்டயமாக வெளியேற்றியதோடு ஆதிசிவனுக்கு படையல் செய்வதற்காக கொண்டு வந்த பொருட்களையும் தூக்கி வீசியமை மிலேச்சத்தமான காட்டு மிராண்டித்தனமான செயலாகும்.

ஆரம்பத்தில் வீதித் தடைகளையிட்டு ஆதிசிவன் ஆலயத்திற்கு பக்தர்கள் செல்வதைத் தடுத்தும் பின்னர் கால்நடையாக நடந்து செல்லுமாறு அனுமதித்து, அங்கு சென்றவர்கள் குடிப்பதற்கு குடிநீரை தடை செய்து வன்கொடுமை புரிந்தனர். பொலிசார் இட்ட இத் தடைகளையும் நெருக்கடிகளையும் தாண்டி ஆதி சிவன் மீது கொண்ட பக்தியால் ஆதிசிவன் ஆலயத்தில் இரவு நேரத்தில் சிவபூஜையில் ஈடுபட்ட சிவபக்தர்கள் மீது பொலிசார் தமது கோரத் தாண்டவத்தினை நிகழ்த்தினர்.

பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று எந்த பாராபட்சமும் பார்க்காமல் தூக்கியெறிப்பட்டார்கள். உலக மகளிர் தினத்தில் சிவபூஜையில் ஈடுபட்ட மகளிர் மீதும் பொலிசாரால் வன்முறைகள் கட்டவிழ்ந்து விடப்பட்டன. அவர்களின் ஆடைகளினை கிழித்து அவமதித்தனர்.

தமிழர்களின் மிகத் தொன்மையான ஆதிசிவன் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்கள் செல்லுகின்ற போது அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து பாதுகாப்பு வழங்குகின்ற பொலிசார் தமிழர்கள் சிவபெருமானின் முக்கிய விரதநாளாகிய சிவராத்திரியில் கூட அடக்குமுறைகளைப் பயன்படுத்தி பூஜை வழிபாடுகளை தடைசெய்கின்றார்கள் என்றால் இது தமிழர்கள் மீதான அப்பட்டமான திட்டமிடப்பட்ட கலாசாரப் பண்பாட்டு இன அழிப்பாகும்.

இவ்வாறான கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலைகளுக்கு எதிராகவும் மரபுசார் வழிபாட்டுரிமைக்காகவும் தமிழர்கள் ஒன்றுபட்டு போராடவேண்டியது இன்றைய காலத்தின் நியதியாகும்.

அவ்வகையில் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் இடம்பெற்ற மிலேச்சத்தமனான செயலினைக் கண்டிப்பததோடு அச் செயலினை கண்டித்து பொது அமைப்புக்களினால் இன்று நல்லூரில் ஒழுங்குபடுத்தப்பட்டிக்கும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளுகின்றேன் - என்றுள்ளது.

அதேவேளை வெடுக்குநாறிமலை கோயிலில் அரங்கேறிய பொலிஸ் அராஜகங்களை கண்டித்து யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இன்று திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments