Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

"யாழ்ப்பாணம்" என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாதது - சீ.வி.கே சீற்றம்


இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான "யாழ்ப்பாணம்" என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்திய துணை தூதுவர் சாய்முரளியைச் சந்தித்து தமிழரசுக் கட்சி சார்பில் கட்சிப் பதில் தலைவரும் வடமாகாண சபையின் அவைத்தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை  சமர்ப்பித்துள்ளார்.

குறித்த கடிதத்திலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாண பொது நூலகத்துக்கு அருகாமையில் திறந்தவெளி அரங்கு அமைந்தி ருந்த யாழ்ப்பாண மாநகர சபைக்கு உரித்தான காணியில் அதற்குப் பதிலாக இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட "யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்" 2023 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி மற்றும் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து திறந்து வைக்கப்பட்டது. யாவரும் அறிந்ததே.

இந்த நிறுவனத்தின் நிர்வாகம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாநகர சபையின் நிதி வசதியீனத்தைக் காரணம் காட்டி அவ்வாறு செய்யப்படாமல் சில முக்கிய அரசியல் காரணங்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது.

 இந்தக் கட்டடம் அதன் முழுமையான அம்சங்கள் ஆராயப்படாமல் நிர்மாணிக்கப்பட்டமையே இந்த நிலை உருவாக காரணமாகியது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சகலரும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இவ்வாறிருக்கையில் கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை இதன் பெயர் "திருவள்ளுவர் கலாசார மையம்" என மாற்றப்பட்டதாக இலங்கையின் பிரதி கலாசார அமைச்சரும் இலங்கைக்கான இந்திய தூதுவரும் வேறு சிலரும் கலந்துகொண்ட சந் திப்பில் பெயர் மாற்றத்துடனான பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

இந்த நடவடிக்கை பற்றிய அறிதல் எதுவும் இந்த மண்ணின் அரசியல் தலைவர்களுக்கோ, பிரதிநிதிகளுக்கோ, சிறிதளவேனும் தெரிந்திருக்கவில்லை என்பது எமக்கு மிகவும் ஆச்சரியத்தையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தி யுள்ளது என்பதை மிகுந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். 

இந்த நடவடிக்கை பற்றிய ஆழ மான அதிருப்தி உள்ளது என்பதை மட்டும் குறிப்பிட்டு, இது ஒரு இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமிடையேயான உணர்வுபூர்வமான விடயம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் அதனால் விபரமாக அதிருப்தியை பதிவு செய்வதை தவிர்க்கிறோம்.

தெய்வப் புலவர் ஐயன் திருவள்ளுவருக்கு நாமாகவே இந்த மண்ணில் பல இடங்களில் உருவச்சிலைகள் அமைத்திருக்கிறோம். அதுமட்டுமல்ல ஔவைக்கும்,  மாகாத்மா காந்திக்கும், பாரதிக்கும் நாமாக இங்கு சிலை எடுத்தவர்கள் தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு நாம் எதிரானவர்கள் அல்ல.

இப்படியிருக்கையில் இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான "யாழ்ப்பாணம்" என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும். 

இது இந்தியாவுக்கும் எமக்குமிடையேயான நல்லுறவில் ஆழமான குழி யாக அமைந்து விடக்கூடாது என நாம் திடமாக நம்புகிறோம். "யாழ்ப்பாணம்" என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம். இனத்தின் அடையாளம் ஆகும். எனவே இந்த விடயத்தை உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தி சீர்செய்யுமாறு வேண்டிக் கொள் கிறோம்.

மேலும் இந்த புதிய பெயர் மாற்றத்திற்கான அறிவித்தலில் கூட தமிழ்மொழி மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. 

இலங்கை அரசின் அரசமைப்பின் 16 ஆவது இலக்க திருத்தத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணங் களில் தமிழ் மொழியே நிர்வாக மொழியாகும். 

சிங்களம் அடுத்த நிர்வாக மொழியாக வும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்பது அரசியலமைப்பின் ஏற்படாக இருக்கையில் சிங்கள மொழியில் முதலாவதாகவும் ஆங்கில மொழியில் இரண்டாவதாகவும் தமிழ் மொழியில் மூன்றாவதாகவும் பெயர்ப் பலகை எழுதப்பட்டிருப்பது இந்த ஏற்பாடுகளை மீறும் செயலாகும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்பே நல்லுறவைப் பாதிப்பின்றி பேணும் பொருட்டு இந்த மீளாய்வுக் கோரிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றது. என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றாம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த கடிதம் , வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் , யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் மற்றும் யாழ் மாநகர சபை ஆணையாளர் கிறிஸ்நேந்திரன் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


No comments