இலங்கை மற்றும் இந்தியாவை இணைக்கும் நாகரிகம் கலாச்சாரம் மற்றும் புவியியல் உறவுகளை மேம்படுத்த எல்லைகள் கடந்து சுற்றுலா துறை ஊக்குவிக்கப்பட வேண்டும் என இந்திய துணை தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை சுற்றுலா உறவுகளை வலுப்படுத்த இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த "சுற்றுலா மாநாடு - 2025 " யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மையத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த மாநாட்டை இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மற்றும் வட மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் அ. பத்தினாதன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
தனது தொடக்க உரையில், துணைத் தூதுவர் சாய் முரளி தெரிவிக்கையில்,
இந்தியாவையும் இலங்கையையும் இயற்கையாகவே இணைக்கும் வரலாற்று, கலாச்சார மற்றும் புவியியல் ரீதியான அண்மைத்தன்மை உள்ளது.
இது இருதரப்பு உறவில் சுற்றுலாவை ஒரு முக்கிய அங்கமாக ஆக்குகிறது.
அண்மையில் தொடங்கப்பட்ட நாகப்பட்டினம்-காங்கேசன்துறை படகு சேவை, யாழ்ப்பாணம் - சென்னை மற்றும் திருச்சி விமான சேவைகள் முக்கியமானது.
இலங்கையின் சுற்றுலா மேம்பாட்டிற்கு இந்தியாவின் ஆதரவை மேலும் இருக்கும். அனைத்துப் பங்கேற்பாளர்களும் தீவிரமாகப் பங்கேற்கவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், இலங்கையின் வட மாகாணத்தின் முழு சுற்றுலா திறனையும் வெளிக்கொணர ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராய வேண்டும் என தெரிவித்தார்
இந்த மாநாட்டில், நாகப்பட்டினம் பிரதிநிதிகள் குழுவின் (தமிழ்நாடு) விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.
அது யாழ்ப்பாணம் - நாகப்பட்டினம் படகு சேவைகள் மூலம் சாத்தியமான சுற்றுலா தளங்கள் குறித்து குறிப்பிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, பல்வேறு இந்திய மாநில மற்றும் யூனியன் பிரதேச சுற்றுலா வாரியங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகியவற்றின் விரிவான விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.
மேலும், மாநாட்டில் இந்திய சுற்றுலாத் துறையின் முக்கிய பிரமுகர்களின் அறிவுப் பகிர்வு விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.
தென்னிந்திய வர்த்தக சம்மேளனத்தின் (சுற்றுலா) தலைவர் சிகரன் பாலன், மாறி வரும் சுற்றுலாத் துறை மற்றும் அதன் சமீபத்திய போக்குகள் குறித்து தெரிவித்தார்.
டிராவல் ஏஜென்ட்கள் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் (தென் பிராந்தியம்) தலைவர் டி. தேவகி, சுற்றுலாத் துறையில் தனது அனுபவத்தையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டார்.
இந்திய சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்கத்தின் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) தலைவர் திரு. கே. பாண்டியன், உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
No comments