Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மரணச்சடங்குக்கு சென்று திரும்பியவர்களின் வாகனம் தடம்புரள்வு - இருவர் உயிரிழப்பு ; 15 பேர் படுகாயம்


வவுனியாவில் பட்டா ரக வாகனம் வீதியில் தடம் புரண்ட நிலையில் , கனரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில், பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ள நிலையில் 15 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முல்லைத்தீவு , விசுவமடு பகுதியை சேர்ந்த யாழினி (வயது 33) மற்றும் சுஜன் (வயது 30) ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர். 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

விசுவமடு பகுதியை சேர்ந்த உறவினர்கள் , கண்டியில் உள்ள உறவினர் ஒருவரின் மரண சடங்குக்கு சென்று விட்டு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கண்டியில் இருந்து பட்டா வாகனத்தில் விசுவமடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தனர். 

அவ்வேளை வவுனியா , ஓமந்தை மாணிக்கர் வளைவு பகுதியில் பட்டா ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து , வீதியில் தடம் புரண்டது. அதன் போது, வாகனத்தில் இருந்தவர்கள் வீதியில் தூக்கி வீசப்பட்டனர். 

அவ்வேளை யாழ்ப்பாணத்தில் வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனம் வீதியில் தடம்புரண்ட பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது. 

குறித்த சம்பவத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த பெண் உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் வாகனத்தில் பயணித்த 15 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் உள்ளிட்ட மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

No comments