Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் கழிவுகளை வீசியவர்களிடம் இருந்து 02 இலட்ச ரூபாய் வருமானம்


நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் கழிவுகளை வீசி சென்றவர்களிடம் இருந்து கடந்த இரண்டு மாத காலத்தினுள் இரண்டு லட்சம் ரூபாவுக்கு மேல் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.  நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்களினை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது. 

அது மிகப்பெரிய சவாலாக காணப்படுகின்ற போதும் அசாத்தியமானதை சாத்தியமாக்கின்ற பணியில் நாம் தொடர்ந்தும் மிகுந்த ஈடுபாட்டுடன் பயணிக்கின்றோம். அதன் பிரகாரம் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி அங்கு கண்காணிப்பு கமராங்கள் பொருத்தப்பட்டு தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. 

இவ்வாறு பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்கள் கண்காணிப்பு கமராக்கள் மூலமாக அடையாளப்படுத்தப்பட்டு கிராம சேவையாளர்களுக்கூடாக அவர்கள் தொடர்பான விபரங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கின்ற செயற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றது. 

அதே நேரம் வாகனங்களில் வந்து கழிவுகளை வீசுபவர்களின் வாகன இலக்கங்கள் மோட்டார் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு அவர்கள் மூலம் குறித்த வாகனங்களின் விபரங்கள் பெறப்பட்டு அபராதம் விதிக்கின்ற செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றது. 

குறித்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கென ஒரு தனி அலகும் நல்லூர் பிரதேச சபையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்கள் பலர் அடையாளப்படுத்தப்பட்டு கடந்த இரண்டு மாத காலத்தினுள் இரண்டு லட்சம் ரூபாவுக்கு மேல் தண்டப்பணம் நல்லூப் பிரதேச சபைக்கு வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

பொது இடங்களில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என்று நல்லூர் பிரதேச சபை பல தடவைகள் அறிவுறுத்தல்கள் விட்டபோதும் சிலர் அவற்றினை அலட்சியம் செய்து பொது இங்களில் கழிவுகளை வீசிவிட்டே செல்கின்றனர். அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பினையுணர்ந்த நல்லூர் பிரதேச சபை கழிவு போடும் இடங்களினை அடையாளப்படுத்தல் - கண்காணிப்பு கமராக்கள் பொருத்துதல் - கண்காணித்தல் - கழிவுகளை வீசுபவர்களை அடையாளப்படுத்தல் - அவர்களுக்கு அபராதம் விதிக்கின்ற செயற்பாட்டினை முன்னெடுத்தல் என்ற பொறிமுறையினை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது. இப் பொறிமுறைக்கு எம்மை இட்டுச் சென்றது எம்முடைய சில பொறுப்பற்ற மக்கள் கூட்டத்தினரே. 

இவ்வாறு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு அபராதம் விதிக்கின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பொது இடங்களில் கழிவுகள் வீசுகின்ற செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லை. எனவே காலத்தின் தேவை கருதி இச் செயற்பாட்டினை முற்றாக நிறுத்துவதற்குரிய கடுமையான நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேலும் விரிபுபடுத்தும். எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன் - என்றார்.

No comments