மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்வம் கர்ணன் (வயது 48)மற்றும் ஏறாவூர் 5ஆம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான தமிழ்ச்செல்வி செல்வகுமார் (வயது 43) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்ச்செல்வி செல்வகுமார் மற்றும் உயிரிழந்தவரது மனைவியான ஆறுமுகம் மணியம்மா ஆகியோர் காலை மீன் வாங்குவதற்காக புலையவெளி ஆற்றுக்குச் செல்லும் வேளையில் பள்ளத்துவட்டை வயல் பகுதியில் நிலமட்டத்தில் இருந்த யானை வேலி கம்பியிலிருந்து வந்த மின்சாரம் தாக்கியுள்ளது.
மின்சார அதிர்ச்சியில் தமிழ்ச்செல்வி செல்வகுமார் நீர் உள்ள பகுதியிலும் இறந்தவரது மனைவி மேட்டு நிலப் பகுதியிலும் வீழ்ந்துள்ளனர்.
நீரில் வீழ்ந்தவரை காப்பாற்றுமாறு ஆறுமுகம் மணியம்மா ஆற்றங்கரையில் நின்ற தனது கணவரை அழைத்துள்ளார்.
தமிழ்ச்செல்வி செல்வகுமாரை நீருக்குள் இறங்கி செல்வம் கர்ணன் காப்பாற்ற முயற்சித்தபோது அவரையும் மின்சாரம் தாகியுள்ளது.
உடனடியாக அயலவர்கள் மின்சார வேலிக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தைத் துண்டித்து இருவரையும் ஓட்டோவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிழந்துள்ளனர்.
சடலங்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







No comments