மருத்துவர் போல நடித்து கடந்த 3 வருடங்களாக சட்டவிரோதமான முறையில் மருத்துவ கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண் ஓடை பிரதேசத்தில் நபர் ஒருவர் மருத்துவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இவர் கண்டி பல்லேகல பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் போல போலியான தரவுகள் மற்றும் மருத்துவர் போன்று உடையணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி, அதனை நம்பவைத்து கடந்த மூன்று வருடங்களாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இது தொடர்பில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த மருத்துவ நிலையம் முற்றுகையிடப்பட்டது.
இதன்போது, அங்கு பணியில் இருந்த நபரிடம் மருத்துவ அடையாள அட்டை மற்றும் நிலையத்திற்கான அனுமதிப்பத்திரங்களை அதிகாரிகள் கோரியுள்ளனர்.
எனினும், அவரிடம் முறையான எந்தவொரு ஆவணங்களும் இல்லையென்பதும், அவர் ஒரு போலி மருத்துவர் என்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த முற்றுகையின் போது, அந்த நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை பொலிஸார் சான்றுப் பொருட்களாக மீட்டுள்ளனர்.
33 வயதுடைய குறித்த நபர், உயர் தரத்தில், போதிய புள்ளிகள் இல்லாமல் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்படாமையால், கண்டிக்கு சென்று பின்னர் மீண்டும், தனது சொந்த ஊரான செம்மண் ஓடையில் இந்த கிளினிக்கை இயங்கி வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.







No comments